இலங்கையில் இருந்து நாடு கடத்தப்படும் சீனப் பிரஜை
கடந்த மாதம் போலி கடவுச்சீட்டில் இலங்கைக்குள் பிரவேசிக்க முயன்ற போது கைது செய்யப்பட்ட சீன பிரஜை விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளின் கீழ் நாடு கடத்தப்படவுள்ளார்.
போதைப்பொருள் தொடர்பான குற்றத்திற்காகத் தேடப்படும் சீனப் பிரஜையை அவரது நாட்டிற்கு நாடு கடத்துவதற்கு பாதுகாப்புப் பணியாளர்களுடன் தனி விமானம் ஒன்றை வழங்குமாறு சீனத் தூதரகத்திடம் கோரப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 18ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சீன பிரஜையின் நடத்தையை கருத்திற்கொண்டே இந்த விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு
இலங்கைக்குள் பிரவேசிக்கும்போது, மேற்கு ஆபிரிக்காவில் உள்ள கினியாவின் போலி கடவுச்சீட்டு அவரிடம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தநிலையில் குறித்த சீன பிரஜை எதிர்வரும் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமையன்று நாடு கடத்தப்படுவார் என்று குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய, தெரிவித்துள்ளார்.
அவரை நாடு கடத்துவதற்கான வழிவகைகளை ஏற்பாடு செய்ய திணைக்களம் சீன அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.
அவர் தற்போது வெலிக்கடை இடைநிலை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
நீதிமன்ற விசாரணை
முன்னதாக குறித்த சீனப் பிரஜையை நாடு கடத்துவதற்கான உத்தரவை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி கடந்த வாரம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு நீதிப்பேராணை மனு தாக்கல் செய்யப்பட்டது.
எனினும் கடந்த திங்கட்கிழமை இந்த மனு நிராகரிக்கப்பட்டது. நீதிமன்ற விசாரணையின் போது, 2019 ஆம் ஆண்டில் போதைப்பொருள் தொடர்பான குற்றத்திற்காக லிபான் என அடையாளம் காணப்பட்ட குறித்த சந்தேக நபரை கைது செய்ய சீன நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளமை தெரியவந்தது.
இருப்பினும், லி தனது நாட்டை விட்டு வெளியேறிவிட்டார். இதனையடுத்தே அவர்; கினியா கடவுச்சீட்டைப் பயன்படுத்தி டுபாயில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளார்.
எனினும் கினியா கடவுச்சீட்டு போலியானது என சர்வதேச காவல்துறையான இன்டர்போல் தெரிவித்துள்ளது.
போதைப்பொருள்
சீன நாட்டவர் சீன அரசாங்கத்தால் தேடப்படும் குற்றவாளி என்றும், எனவே அவரை சீனாவுக்குத் திரும்ப அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் சீனத் தூதரகம் கூறியது.
அவரை வேறு நாட்டுக்கு அனுப்ப வேண்டாம் என்றும் தூதரகம் கேட்டுக்
கொண்டது.
இந்தநிலையில் இலங்கையின் குடிவரவு அதிகாரிகள் தன்னை தாக்கியதாக குற்றம்
சுமத்தப்பட்டுள்ள லி முறையிட்டிருந்தார்.
இருப்பினும், சட்டமருத்துவப் பரிசோதனையில், காயங்கள் பல் துலக்கியதன் காரணமாக சுயமாக ஏற்படுத்தப்பட்டவை என்பது தெரியவந்தது.
ஏற்கனவே குறித்த சீனப் பிரஜை நாட்டுக்குள் வந்தபோது இலங்கையின் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ, குடிவரவு குடியகழ்வுக் கட்டுப்பாட்டாளருக்கு, முதலீட்டாளரான லிக்கு 'சிரமம் இன்றி பயணத்தை மேற்கொள்ள' அனுமதி வழங்குமாறு கோரி கடிதம் எழுதியிருந்தார்.
எனினும் தற்போது போதைப்பொருள் வழக்கில் உள்ள குற்றச்சாட்டுகள் உட்பட, சீன
முதலீட்டாளரின் பின்னணி குறித்து தனக்கு தெரியாது என்று அருந்திக்க பெர்ணான்டோ
குறிப்பிட்டுள்ளார்.

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan
