கோட்டாபயவுக்கு அழைப்பு விடுத்த சீனா!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் (Gottabaya Rajapaksa) சீன வெளிவிவகார அமைச்சர் வேங்க் ஹி(Wang Yi) ஆகியோருக்கு இடையில் இன்று விசேட சந்திப்பு நடைபெற்றுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடந்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கோவிட் தொற்று நோய் நிலைமையை எதிர்கொள்ள சீனா வழங்கிய பொருள் மற்றும் நிதி ரீதியாக உதவிகள் சம்பந்தமாக ஜனாதிபதி, இலங்கை அரசு மற்றும் மக்கள் சார்பில் தனது நன்றிகளை சீன வெளிவிவகார அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் புதிய சாதாரணமயமாக்கலின் கீழ் சுற்றுலாப் பயணிகளுக்காக இலங்கை திறக்கப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். சீனாவின் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறும் ஜனாதிபதி, சீன அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் கொரோனா தொற்று நோய் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக கடனை திரும்ப செலுத்தும் விடயத்தை மறுசீரமைப்புக்கு உட்படுத்துவது குறித்து கவனம் செலுத்தினால், அது இலங்கைக்கு பெரிய நிவாரணமாக இருக்கும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனை தவிர சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் போது, மானிய அடிப்படையிலான வர்த்தக கடன் முறையில் பொருட்களை பெற்றுக்கொள்வது குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு சீன வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதிக்கு அழைப்பையும் விடுத்துள்ளார்.