ஈரானின் உயிர்நாடியை குறிவைத்த அமெரிக்கா.. எதிர்பாராத பொருளாதார சிக்கலில் சீனா!
ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் சீனாவில் எரிபொருள் தொடர்பான பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானின் சுமார் 90 சதவீதம் எண்ணெய் ஏற்றுமதி நடைபெறும் முக்கிய மையமாக இந்த தீவு உள்ளது.
இந்நிலையில் குறித்த தீவில் நடத்தப்பட்ட தாக்குதலில் தீவின் எரிசக்தி கட்டமைப்புகள் சேதமடையவில்லை.
இருப்பினும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹோர்மூஸ் கடற்பாதையில் கப்பல்களின் பாதுகாப்பான பயணத்தை ஈரான் தடுக்க முயன்றால், அந்த அமைப்புகளையும் அழித்துவிடுவோம் என எச்சரித்தார்.
சீனாவுக்கு ஏற்படும் தாக்கம்
மேலும், “வேடிக்கைக்காகவே மீண்டும் தாக்கலாம்” எனவும் அவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரானின் கடற்கரையிலிருந்து சுமார் 33 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கார்க் தீவு, ஈரானின் பெரும்பாலான எண்ணெய் ஏற்றுமதிகள் நடைபெறும் முக்கிய முனையமாகும்.
போரின் தொடக்கம் முதல் ஈரான் 13.7 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெயை ஏற்றுமதி செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
அந்த எண்ணெயில் பெரும்பாலான பகுதி உலகின் மிகப்பெரிய மூல எண்ணெய் இறக்குமதி நாடான சீனாவுக்கு அனுப்பப்படுகிறது.
கடந்த 2024ஆம் ஆண்டில் ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 91 சதவீதத்தை சீனாவே வாங்கியதாக தரவுகள் காட்டுகின்றன.
சீனாவில் எரிபொருள் விலை உயர்வு
இந்நிலையில், ஈரான் போரின் தாக்கத்தால் சர்வதேச எண்ணெய் விலை உயர்ந்த நிலையில், சீனாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ளன.

பீஜிங்கில் மக்கள் தங்களது வாகனங்களுக்காக எரிபொருள் நிரப்ப அவசரமாக பெட்ரோல் நிலையங்களுக்கு செல்வதால் நீண்ட வரிசைகள் உருவாகியுள்ளன.
இதனுடன், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
உலகின் இரண்டாவது பெரிய எண்ணெய் நுகர்வு நாடான சீனாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஒரு மெட்ரிக் தொன்னுக்கு முறையே 695 யுவான் மற்றும் 670 யுவான் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், உள்ளக எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்க, சீனா மார்ச் மாதத்தில் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் ஏற்றுமதிக்கு தற்காலிக தடையும் விதித்துள்ளது.
ஈரானிலிருந்து வரும் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டால், அதோடு Strait of Hormuz வழியாகவும் தடைகள் ஏற்பட்டால், உலகளாவிய எண்ணெய் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.