சீனாவின் ரிக்டொக் சொத்து விற்பனையில் சர்ச்சை: ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் சட்டமா அதிபர் பாம் போண்டி ஆகியோருக்கு எதிராகப் புதிய சட்டப்போராட்டம் ஒன்று தொடங்கியுள்ளது.
சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ரிக்டொக் செயலியின் அமெரிக்கச் சொத்துக்களை விற்பனை செய்வதற்கு அவர்கள் வழங்கிய ஒப்புதலை எதிர்த்து இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ரிக்டொக்கின் அமெரிக்கப் பிரிவை வாங்குவதற்குத் திரட்டப்பட்ட ஒரு குறிப்பிட்ட முதலீட்டாளர் குழுவிற்குச் சாதகமாக ட்ரம்ப் நிர்வாகம் செயல்பட்டதாக மனுதாரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
விற்பனை ஒப்பந்தம்
இது தேசிய பாதுகாப்பு மற்றும் தரவுப் பாதுகாப்பு விதிகளுக்குப் புறம்பானது என்றும், இதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விற்பனை ஒப்பந்தம் முறையாக நடைபெறவில்லை என்றும், இது அமெரிக்கப் பயனர்களின் தரவு பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் என்றும் சட்ட வல்லுநர்கள் வாதிடுகின்றனர்.
கடந்த காலங்களில் ரிக்டொக்கைத் தடை செய்யப் போவதாக எச்சரித்த ட்ரம்ப், தற்போது அதன் விற்பனைக்கு அவசரமாக முட்டுக்கட்டை போடாமல் ஒப்புதல் வழங்கியது ஏன் என்ற கேள்வியையும் இந்த வழக்கு எழுப்பியுள்ளது.
வழக்கு
வெள்ளை மாளிகை மற்றும் பாம் போண்டி தரப்பிலிருந்து இந்த வழக்கு குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான விளக்கங்கள் ஏதும் அளிக்கப்படவில்லை.

அமெரிக்காவில் ரிக்டொக்கின் எதிர்காலம் மற்றும் அதன் உரிமையாளர் மாற்றம் தொடர்பான இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தின் கைகளுக்குச் சென்றுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.