சேதமடைந்த குருவிட்ட சிறைச்சாலையை சேதப்படுத்திய கைதிகளே சீரமைத்தனர்...
குருவிட்ட சிறைச்சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரு குழுக்களைச் சேர்ந்த கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட கடுமையான மோதலின்போது, சிறைச்சாலையின் மூன்று கட்டிடங்களின் கூரைகள் பலத்த சேதமடைந்துள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோதலின்போது கைதிகள் கட்டிடங்களின் கூரைத் தகடுகளை அகற்றி, அவற்றைப் பயன்படுத்தி பாதுகாப்பு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சேதமடைந்த சிறைச்சாலை
கலவரத்தில் ஈடுபட்ட கைதிகளை கட்டுப்படுத்தி, அவர்களை மீண்டும் சிறை அறைகளுக்கு அழைத்துச் செல்ல சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
எனினும், கூரைகள் சேதமடைந்திருந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அப்பகுதியில் பெய்த கடும் மழையால் கைதிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். சிறை அறைகளுக்குள்ளேயே மழையில் நனைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பொலிஸார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் தலையீட்டில், கூரைகளை சீரமைப்பதற்குத் தேவையான கூரைத் தகடுகள் வழங்கப்பட்டுள்ளன.
பின்னர், கூரைகளை சேதப்படுத்திய கைதிகளே முன்வந்து, கடந்த 8ஆம் திகதி சேதமடைந்த கூரைகளை மீண்டும் அமைத்து சீரமைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.