சேருவில பிரதேச சபை தேசிய மக்கள் சக்தி வசம்
திருகோணமலை - சேருவில பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று (20) கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரும் தலைமை தாங்கும் அதிகாரியுமான அஸ்மி ஆதம்லெப்பை தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது, சேருவில பிரதேச சபையின் தவிசாளர் தெரிவுக்காக நடாத்தப்பட்ட இரகசிய வாக்களிப்பில், தவிசாளர் வேட்பாளராக போட்டியிட்ட, தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் எம். ஜி. ஜே. துஷார சம்பத் வெற்றி பெற்றுள்ளார்.
பகிரங்க வாக்களிப்பை கோரி
இரகசிய வாக்களிப்பில் பதிவு செய்யப்பட்ட 10 வாக்குகளில் 9 வாக்குகளைப் பெற்று, இவர் வெற்றி பெற்றார். ஒரு வாக்கு நிராகரிக்கப்பட்டிருந்தது.
16 உறுப்பினர்களைக் கொண்ட, இந்தப் பிரதேச சபையில், 6 உறுப்பினர்கள், வாக்களிப்பில் கலந்து கொள்ளாது, சபையை விட்டும் வெளியேறியிருந்தனர்.
ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ;, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் , மக்கள் போராட்ட முன்னணி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களே பகிரங்க வாக்களிப்பை கோரி, இரகசிய வாக்களிப்பு முறையை பகிஷ்கரித்து, சபையை விட்டும் வெளிநடப்புச் செய்தனர்.
எனினும், இலங்கை தமிழரசுக் கட்சி, சர்வஜன அதிகாரம் மற்றும் பொதுசன ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 3 உறுப்பினர்களும் இரகசிய வாக்களிப்பில் கலந்து கொண்டனர்.
கட்சிக்கு பெரும்பான்மை
உதவி தவிசாளராக, சர்வஜன அதிகாரம் கட்சி உறுப்பினர் கே.கே. திமுத்து பிரியங்கர போட்டியின்றி ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டார்.
நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத, சேருவில பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை, தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.
16 உறுப்பினர்களைக் கொண்ட, சேருவில பிரதேச சபைக்கான, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி 7 உறுப்பினர்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 3 உறுப்பினர்களையும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், சர்வஜன அதிகாரம் கட்சி, ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன, தமிழரசு கட்சி, மக்கள் போராட்ட முன்னணி, ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன ஆகியன தலா ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

