படுகொலைகளுக்கு நீதி வேண்டும்! பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் சாணக்கியன் எம்.பி. வலியுறுத்தல்
மட்டக்களப்பு மற்றும் மண்டூரில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நேரில் வலியுறுத்தினார்.
மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பிரசன்னத்துடன் நேற்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படுகின்ற பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு சார் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகள் ஆராயப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
சாணக்கியன் முன்வைத்த விடயங்கள்
இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பல விடயங்களைத் தீர்வு காணும் வகையில் முன்வைத்தார். முதலாவதாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணியை விடுவிக்குமாறு அவர் கோரினார்.
அதற்குப் பதிலளித்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், அடுத்த வருடம் புதிய கட்டடம் பொலிஸாருக்கு உரித்தான காணியில் அமைத்தன் பின்னர் அந்தக் காணியை விடுவிப்பதாகத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து களுவாஞ்சிகுடியில் பொதுத் தேவைகளுக்கான கட்டடங்கள் அமைப்பதற்கான அரச காணி இல்லை எனவும், களுவாஞ்சிக்குடியில் விசேட அதிரடிப் படை முகாம் அமைந்துள்ள காணியை பொதுத்தேவைகளுக்காக வழங்குமாறும், விசேட அதிரடிப் படை முகாமைப் பொலிஸ் நிலையக் காணியினுள் மாற்றுமாறு, சாணக்கியன் எம்.பி. கேட்டுக்கொண்டார்.
பொலிஸ் நிலையத்துக்குரிய காணி
பொலிஸ் நிலையமும், விசேட அதிரடிப்படை முகாமும் ஒன்றாக அருகில் இருக்க முடியாது என்று அமைச்சர் தெரிவித்ததைத் தொடர்ந்து, பொலிஸ் நிலையத்துக்குரிய காணியில் மூன்று ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட காணியை அரச பொதுத்தேவைகளுக்கு வழங்குவதாகப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.
மேலும், வவுணதீவுப் பிரதேசத்தில் உள்ள தாண்டியடி மாவீரர் துயிலும் இல்லம் அமைந்துள்ள காணியில் விசேட அதிரடிப் படை முகாம் இருக்கின்றது. அந்தக் காணியையும் விடுவித்து மாவீரர்களின் வணக்கம் செலுத்துவதற்கு ஏற்ப மாற்றியமைத்து வழங்குமாறு சாணக்கியன் எம்.பி. கேட்டுக்கொண்டார்.
"அந்தக் காணியினுள் நிரந்தரக் கட்டடங்கள் அமைத்துள்ளோம். அவ்வாறு துயிலும் இல்லம் இருந்தமைக்கான அடையாளங்கள் இல்லை." என்று விசேட அதிரடிப் படை முகாம் அதிகாரி தெரிவித்தார்.
நேரடி கள விஜயம்
முற்றுமுழுதாக இல்லாவிட்டாலும் குறித்த காணியில் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவதற்கு ஒரு பகுதியை விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டமைக்கிணங்க, அமைச்சர் நேரடியாகக் கள விஜயம் மேற்கொண்டு காணியின் ஒரு பகுதியை விடுவிப்பதாகத் தெரிவித்தார்.
போரதீவுப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட தும்பங்கேணியில் பிரதேச செயலகத்துக்கு உரித்தான தொழிற்பயிற்சி அதிகார சபையில் 2007ஆம் ஆண்டுக்குப் பின்னர் இராணுவம், விசேட அதிரடிப் படை மற்றும் பொலிஸ் காவலரண்கள் போன்றன மாறி மாறி 2021ஆம் ஆண்டு வரையும் இருந்துள்ளன.
இதனுடைய மின்சாரப் பட்டியல் செலுத்தாமல் குறித்த காலப் பகுதிக்கு மின்சாரக் கட்டணமாக 8 இலட்சத்து 96 ஆயிரத்து 236 ரூபா நிலுவையாக உள்ளது. இந்தக் கட்டணத்தைச் செலுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அமைச்சரைக் கேட்டுக்கொண்டார். பொலிஸ் காவலரண் இருந்த காலப் பகுதிக்குரிய கட்டணத்தைத் செலுத்துவதாகவும், மீதியை மின்சார சபையுடன் கலந்துரையாடி ஒரு தீர்மானத்தைப் பெறுமாறும் அமைச்சரால் தெரிவிக்கப்பட்டது.
ஆரையம்பதி பிரதேச செயலகத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு பொலிஸ் நிலையத்தை அமைக்குமாறு அமைச்சரை சாணக்கியன் எம்.பி. கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக ஆராய்ந்து அடுத்து வரும் வருடங்களில் பொலிஸ் நிலையத்தை அமைப்பதாக அமைச்சர் உறுதியளித்தார்.
துப்பாக்கிச்சூட்டு சம்பவம்
அண்மையில் மட்டக்களப்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சரின் வீட்டின் முன்னால் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் இறந்தவர் மற்றும் மண்டூரில் துப்பாக்கிச்சூடு நடத்திக் கொல்லப்பட்ட மதிதயன் ஆகியோருக்கும், காணி சீர்திருத்த ஆணையாளர் விமல் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை அடையாளம் கண்டு நீதியைச் சரியான முறையில் நிலைநாட்ட வேண்டும் என்றும் சாணக்கியன் எம்.பி. கேட்டுக்கொண்டார்.
இதற்கு அமைச்சர் பதிலளிக்கையில், கடந்த அரசுகளில் இவ்வாறு பல கொலைகள் நடைபெற்றுள்ளன. ஆனால், நாம் எந்தவிதமான வேறுபாடுகளுமின்றி பூரண விசாரணைகளை மேற்கொண்டு நீதியை நிலைநாட்டுவதற்காகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். பொலிஸ் திணைக்களம் அரசியல் மயப்படுத்தப்படவில்லை.
நாம் எந்த பேதமுமின்றி நீதியையும், சட்ட ஒழுங்குகளையும் நிலைநாட்டுவதற்காகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். மண்டூர் மதிதயனின் கொலைக்கு நீதியை நிலைநாட்டுவதற்காக இந்தச் சம்பவம் தொடர்பாக மீள் விசாரணை செய்து நீதியை நிலைநாட்டுவதற்கு விசாரணையை ஆரம்பிக்குமாறு வெல்லாவெளி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு அமைச்சர் பணிப்புரை வழங்கினார்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி, கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்தலால் இரத்னசேகர, நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், இளையதம்பி சிறிநாத், ஞானமுத்து சிறிநேசன் மற்றும் கந்தசாமி பிரபு, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.



நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் மாலை திருவிழா





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 13 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் திரும்ப பெறப்படும் 72,000 கார்கள்: எந்தெந்த கார் மாடல்கள் இடம்பெறுகிறது தெரியுமா? News Lankasri

பாகிஸ்தான் உளவுத்துறையுடன் ரகசிய தொடர்பு., இந்தியாவின் DRDO விருந்தினர் இல்ல மேலாளர் கைது News Lankasri
