இலங்கை மத்திய வங்கியின் புதிய விதிமுறைகள் - வாகன விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்
இலங்கை மத்திய வங்கியினால் வாகன கடன் வரம்பு தொடர்பில் விதிக்கப்பட்ட புதிய விதிமுறைகள் வாகன விலைகளில் மாற்றம் ஏற்படாது என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், நிலவும் பிற சூழ்நிலைகளை பொறுத்து வாகன விலைகள் மாறக்கூடும் என்றும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
சில வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களின் தந்திரமான உத்தி
இதற்கிடையில், இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட விதிமுறைகளை மீறுவதற்கு சில வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் தந்திரமான உத்திகளைக் கையாளக்கூடும் என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் கூறியுள்ளது.

இதுபோன்ற சந்தர்ப்பங்களை தடுப்பதில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை பேராசிரியர் சுரங்க டி சில்வா, வாகன கடன்கள் மற்றும் குத்தகை வசதிகள் மீது புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும் இலங்கை மத்திய வங்கியின் முடிவு மிகவும் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்று கூறியுள்ளார்.
வாகனக் கடன்கள் மற்றும் குத்தகை வசதிகள் மீது இலங்கை மத்திய வங்கியால் விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன.
புதிய உத்தரவின்படி, பல்வேறு வாகனங்களுக்கான அதிகபட்ச கடன் வழங்கும் வரம்புகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
வாகனங்களுக்கான கடன் வரம்பு
இதன்படி, வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கான கடன் வரம்பு 60% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

மோட்டார் கார்கள், எஸ்யூவி (SUV) ரக வாகனங்கள், வேன்கள், முச்சக்கர வண்டிகள் (Three-wheelers) மற்றும் இதர வாகனங்களுக்கான நிதியளிப்பு வரம்பு 40% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிகள் அனைத்தும் இலங்கையில் இதுவரை பதிவு செய்யப்படாத (Unregistered) வாகனங்களுக்கும், முதன்முறை பதிவு செய்யப்பட்டு ஓராண்டுக்கும் குறைவான காலமே ஆன வாகனங்களுக்கும் பொருந்தும் என மத்திய வங்கி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.