வாகன இலக்கத்தகடுகள் குறித்து சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
உத்தியோகபூர்வமற்ற அல்லது தரநிர்ணயமற்ற இலக்கத்தகடுகளைப் பொருத்தி வாகனங்களை செலுத்த வேண்டாம் என பொலிஸார் சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வாகனப்பதிவு இலக்கத்தகடுகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்ட போதிலும், மாற்றங்கள் செய்யப்பட்ட இலக்கத்தகடுகளைப் பயன்படுத்தி சட்டப்பூர்வமாக வாகனங்களை செலுத்த முடியாது எனப் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
சாரதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி
இருப்பினும், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு இணங்க, வாகனத்தின் இலக்கத்தை 'A4' அளவிலான காகிதத்தில் அச்சிட்டுக் காட்சிப்படுத்த சாரதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் கடந்த 10 மாதங்களாக வாகன இலக்கத் தகடுகளை வழங்குவதை நிறுத்தி வைத்துள்ள நிலையில், சுமார் 400,000 இலக்கத் தகடுகள் தேங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்ட நடவடிக்கை
எனினும், உத்தியோகபூர்வ வாகன இலக்கத் தகடுகளை வழங்கும் பணிகள் எதிர்வரும் ஜூன் மாதம் 10 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, அங்கீகரிக்கப்பட்ட தரங்களை பூர்த்தி செய்யாத இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தும் வாகன உரிமையாளர்களுக்கு எதிராக தொடர்ந்தும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குடும்பத்தினரைப் பார்க்காமல் நான்கு ஆண்டுகள்... வெளிநாட்டில் கோர விபத்தில் சிக்கிய ஆசிய இளைஞர் News Lankasri