மத்திய கிழக்கில் போர்ச் சூழல்: உலக சந்தையில் அதிரடி விலை உயர்வு - தயார் நிலையில் இலங்கை
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பினால் ஏற்படும் பணவீக்கத் தாக்கத்தை எதிர்கொள்ளும் வலுவான நிலையில் இலங்கை இருப்பதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எண்ணெய் இறக்குமதியை நம்பியிருக்கும் ஒரு நாடு என்ற ரீதியில், விலை உயர்வு இலங்கையின் பணவீக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போதைய பொருளாதார நிலைமை அதனைச் சமாளிக்கக் கூடியதாக உள்ளது.
பணவீக்கம்
இலங்கையின் இலக்கு பணவீக்கம் 5 வீதமாக உள்ள நிலையில், கடந்த மாத பணவீக்கம் வெறும் 1.6 வீதமாக மட்டுமே பதிவாகியுள்ளது. இந்த இடைவெளி, விலையேற்றத்தினால் ஏற்படும் அதிர்ச்சியைத் தாங்கிக்கொள்ள இலங்கைக்கு ஒரு சிறந்த தளத்தை வழங்கியுள்ளது. முன்னைய நெருக்கடிக் காலத்தில் பணவீக்கம் 70 வீதமாக இருந்தது.
அதனுடன் ஒப்பிடும்போது நாம் இப்போது மிகவும் தயார் நிலையில் இருக்கிறோம். மத்திய கிழக்கு மோதல்கள் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 90 டொலர்களைத் தாண்டியுள்ளது. வெள்ளிக்கிழமை (06) மட்டும் பிரெண்ட் மசகு எண்ணெய் விலை 9 வீதத்துக்கும் அதிகமாக உயர்ந்து, கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது.
பொருளாதாரக் குறிகாட்டிகள்
பணவீக்கத்தை 5 வீத இலக்கை நோக்கி வழிநடத்தும் நோக்கில், இலங்கை மத்திய வங்கி அண்மையில் தனது கொள்கை வட்டி விகிதத்தை 7.75 வீத மட்டத்தில் பேணத் தீர்மானித்துள்ளது. உலகளாவிய ரீதியில் பணவீக்க அழுத்தம் அதிகரித்து வரும் போதிலும், இலங்கையின் தற்போதைய பொருளாதாரக் குறிகாட்டிகள் நம்பிக்கையளிக்கிறது.
எனினும், இலங்கையைப் போன்ற சிறிய பொருளாதாரத்திற்கு உலகளாவிய விலை மாற்றங்கள் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால், நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாக கூறியுள்ளார்.