கொழும்பில் அத்துமீறி வாகனம் நிறுத்திய அர்ச்சுனா: நீதிமன்றின் அதிரடி உத்தரவு
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் பொலிஸாருக்கு இடையூறு விளைவித்ததாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவினை நேற்று, (25.09.2025) கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமாரகே பிறப்பித்துள்ளார்.
கொழும்பில் மிகவும் பரபரப்பான வீதியான கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக காரை நிறுத்தியமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை போக்குவரத்து பொலிஸார் விசாரித்துள்ளனர்.
வழக்கு தாக்கல்..
இதன்போது, காரை குறித்த இடத்தில் ஏன் நிறுத்தினீர்கள் என பொலிஸார் வினவியதற்கு “காரை இங்கே நிறுத்தாமல், உங்கள் தலையிலா நிறுத்துவது” என அவமரியாதையாக பொலிஸ் அதிகாரியிடம் நடந்து கொள்வது காணொளியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள மற்றும் பேருந்துகள் நிறுத்தப்படும் குறித்த பகுதியில் வாகனங்களை நிறுத்துவது தடை செய்யப்பட்டுள்ள நிலையிலேயே அர்ச்சுனா இவ்வாறு செயற்பட்டுள்ளார்.
அச்சந்தர்ப்பத்தில் கடமையில் இருந்த கோட்டை பொலிஸ் அதிகாரி ஒருவரின் கடமைகளில் செல்வாக்கு செலுத்தியதாகக் கூறி, பொலிஸார் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த பின்னர், நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கோட்டை பொலிஸில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு எதிராக செயற்பட்டுள்ளமை மற்றும் மோட்டார் வாகன கட்டளைச் சட்டத்தை மீறியமை போன்றவற்றை சுட்டிக்காட்டி கோட்டை பொலிஸார் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஒரு 'B' அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.
சம்பவத்தின் திருத்தப்படாத காணொளி காட்சிகளைப் பெறுவதற்கு சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி ஊடகங்களுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு செய்யப்பட்ட கோரிக்கைக்கு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமாரகே அனுமதி வழங்கியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



