தேசிய புலனாய்விடம் மும்பையில் சிக்கிய இலங்கைப் பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்
விடுதலை புலிகள் அமைப்பை சேர்ந்த உமா காந்தனின் கட்டளைப்படி, மும்பையில் உள்ள வங்கி கணக்கு ஒன்றில் இருந்து, அந்த அமைப்பினருக்கு, 42 கோடி ரூபாயை மாற்ற முயன்றோம்' என, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைதான இலங்கை பெண் ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இலங்கையில் இருந்து சுற்றுலா விசாவில், 2019ல் சென்னைக்கு சென்ற லட்சுமணன் மேரி பிரான்சிஸ்கா என்ற 45 வயதான பெண்ணும் அவரது நண்பர்களும், அண்ணா நகரில் தங்கியுள்ளனர்.
பெண்ணின் வாக்குமூலம்
இதன் பின்னர், லட்சுமணன் மேரி பிரான்சிஸ்கா, 2022ல், சென்னை விமான நிலையத்தில் இருந்து கர்நாடகா மாநிலம் பெங்களூரு செல்ல முயன்றுள்ளார்.
அப்போது அவரை, தமிழக கியூ பிரிவு பொலிஸார், சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். தொடர்ந்து அவரின் நண்பர்கள் ஐந்து பேரையும் கைது செய்தனர்.
இந்த நிலையில், NIA என்ற தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகளின் விசாரணையில், லட்சுமணன் மேரி பிரான்சிஸ்கா மற்றும் அவரது நண்பர்கள், விடுதலை புலிகள் அமைப்புக்கு நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
அதனால், லட்சுமணன் மேரி பிரான்சிஸ்கா உள்ளிட்டோர் மீது, சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக, அமுலாக்கத்துறை அதிகாரிகளும் வழக்கு பதிவு செய்தனர்.
தற்போது, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள,லட்சுமணன் மேரி பிரான்சிஸ்காவிடம், அமுலாக்கதுறையினர் விசாரணை நடத்திய போது, அவர் அளித்துள்ள வாக்குமூலம் தற்போது வெளியாகியுள்ளது.
தோல்வியில் முடிந்த திட்டம்
இதன்படி, ஐரோப்பிய நாடான டென்மார்க்கில், தமது அமைப்பை சேர்ந்த உமா காந்தன் தங்கி உள்ளார்.அவர் பிறப்பித்த கட்டளைப்படியே தாம் செயல்பட்டு வந்தோம் என்று அவர் கூறியுள்ளார்.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், ஹமிதா ஏ லொல்ஜி என்பவர் சேமிப்பு கணக்கு வைத்திருந்தார்; அவர் இறந்து விட்டார்.
எனினும்,லொல்ஜியின் வங்கி கணக்கில், 42 கோடி ரூபாய் இருப்பது உமா காந்தனுக்கு தெரியவந்தது.
இந்த பணத்தை விடுதலை புலிகள் அமைப்புக்கு மாற்ற, தாம் உட்பட ஐந்து பேரை கருவியாக பயன்படுத்தினார்.
லொல்ஜியின் பணத்தை, இணையம் வாயிலாக தங்கள் அமைப்புக்கு மாற்ற முயன்றோம். அதற்காக போலி ஆவணங்கள் வாயிலாக, லொல்ஜியின் பெயரில், 'சிம் அட்டை வாங்கினோம்.
அதை பயன்படுத்தி, பணத்தை எடுக்க முயன்ற போது, எங்களின் திட்டம் தோல்வியில் முடிந்தது.இதனால், லால்ஜியின் வாரிசு தாமே என்பது போல சான்றிதழ் தயார் செய்தோம்.
இந்த சான்றிதழை பயன்படுத்தி பணத்தை எங்கள் அமைப்புக்கு மாற்ற, சென்னையில் இருந்து பெங்களூரு சென்று, அங்கிருந்து மும்பை செல்ல இருந்தேன்.
ஆனால், விமான நிலைய அதிகாரிகள் மற்றும் பொலிஸாரிடம் சிக்கிக் கொண்டேன் என்று அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.



