இலங்கைக்கு கடல் வழியாக கடத்த இருந்த கஞ்சா பறிமுதல்: கடத்தல்காரர்களின் சொத்து மற்றும் வங்கி கணக்குகள் முடக்கம்
இலங்கைக்கு கடத்த பிரப்பன் வலசை கடற்கரைக்கு வானில் கொண்டுவரப்பட்ட 297 கிலோகிராம் கஞ்சா இன்றைய தினம் (08.08.2026) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 670 கிலோகிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதோடு, கடத்தல்காரர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளர் சந்தீஷ் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் உட்கோட்ட குற்ற தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த வான் ஒன்றை சோதனை செய்தபோது அதில் 297 கிலோகிராம் நிறையுடைய கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.

விசாரணை முன்னெடுப்பு
இதையடுத்து வானுடன் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த பொலிஸார் அங்கு நின்று கொண்டிருந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய ஆற்றங்கரை பகுதியைச் சேர்ந்த தினேஷ் மற்றும் பிள்ளைமடம் பகுதியைச் சேர்ந்த களஞ்சீஸ்வரன் ஆகிய இருவரையும் கைது செய்து ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
பொலிஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் கஞ்சா பொட்டலங்கள் அனைத்தும் ஆந்திராவிலிருந்து கொண்டு வரப்பட்டதாகவும், இவை பிரப்பன்வலசை கடற்கரையில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்திச் செல்ல இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்களை மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளர் சந்தீஷ் பார்வையிட்டார்.
கஞ்சா பறிமுதல்
பின்னர் செய்தியாளிடம் பேசியவர், பிரப்பன்வலசை கடற்கரையில் 297 கிலோகிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்படுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் மாவட்ட பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த ஆண்டு இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் 212 போதைப்பொருள் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 670 கிலோகிராம் கஞ்சா மற்றும் ஒரு கிலோகிராம் 800 கிராம் மெத்தப்பெட்டமன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் கைது செய்யப்பட்டவர்களின் வங்கிக் கணக்கு மற்றும் சொத்துக்கள் முடக்கப்பட்டு வருவதுடன் போதைப் பொருள் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

பொரளை சிறைச்சாலைக்குள் பதற்றத்தை ஏற்படுத்திய கும்பல் யார்...! குற்றப் பின்னணி தொடர்பில் அதிர்ச்சித் தகவல்கள்
27வது திருமண நாள் நெருங்கும் நிலையில் விவாகரத்து வழக்கு வாபஸ்! விஜய்யுடன் மீண்டும் இணைவாரா? Manithan
ஸ்காட்லாந்தில் கொடூர பாலியல் குற்றவாளி தப்பியோட்டம்: தேடுதல் வேட்டையில் காவல்துறையினர் News Lankasri