அமெரிக்கா குறித்து கெய்ர் ஸ்டார்மர் கூறிய தகவலால் கனடா அதிருப்தி
அமெரிக்கா, பிரித்தானியாவின் நட்பு நாடு என பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கூறியமைக்கு, கனடா பிரதமர் ட்ரூடோவின் முன்னாள் ஆலோசகரான ரோலண்ட் பாரீஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கும் இடையில் வெள்ளை மாளிகையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இதன்போது, அமெரிக்காவும் பிரித்தானியாவும் சிறந்த வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை செய்துகொள்ளும் எனவும் இதன் பின்னர் வரிவிதிப்புக்கான அவசியம் இருக்காது எனவும் ட்ரம்ப் கூறியிருந்தார்.
நட்பு நாடுகள்
அங்கு ஒரு ஊடகவியலாளர் கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கும் ட்ரம்பின் திட்டம் குறித்து அவரிடம் விவாதித்தீர்களா என ஸ்டார்மரிடம் கேள்வியெழுப்பினார்.
மேலும், பிரித்தானியாவில் மன்னரின் கட்டுப்பாட்டை நீக்கும் ட்ரம்பின் விருப்பம் குறித்தும் அவர் வினவினார்.
அப்போது பதிலளித்த ஸ்டார்மர், நீங்கள் எங்களிடம் இல்லாத ஒரு பிளவை உருவாக்க விரும்புகின்றீர்கள் என கூறினார். எங்கள் நாடுகள் இரண்டும் மிக நெருங்கிய நட்பு நாடுகள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
துரோகம்
இந்நிலையிலேயே, கனடா தொடர்பான கேள்விக்கு ஸ்டார்மரின் பதில் துரதிர்ஷ்டவசமானது என ரோலண்ட் பாரீஸ் கூறியுள்ளார்.
கனடா ஒரு இறையாண்மையுள்ள நாடு என ஸ்டார்மர் கூறியிருக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ட்ரம்பின் நல்ல மனநிலையை கெடுக்கக்கூடாது என்பதற்காக, ஸ்டார்மர் எங்களுக்கு துரோகம் செய்துவிட்டார் என அவர் மேலும் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri
