மலையகத்துக்கு தேர்தல் காலத்தில் மட்டும் வரும் போலிகளை நம்ப முடியாது: ராமேஷ்வரன் எம்.பி (Photos)
மலையகத்தில் பல அரசசார்பற்ற நிறுவனங்கள் சேவைகளை முன்னெடுக்கின்றன, அவற்றுக்கு எவரும் தடை ஏற்படுத்தவில்லை. மலையகத்துக்கு சேவை செய்ய முன்வருபவர்கள் இருந்தால் நாம் நிச்சயம் வரவேற்போம். ஆனால் எமது சமூகத்தை பிளவுபடுத்தும் நோக்கில் தேர்தல் காலத்தில் மட்டும் வரும் போலிகளை நம்பமுடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
‘‘சிறுவர்களுக்கான கனவுகள்” என்ற வேலை திட்டத்தின் கீழ் மலையக பகுதிகளில் நிர்மானிக்கப்பட்ட நவீன தொழில்நுட்பம் கொண்ட சிறுவர் அபிவிருத்தி நிலையங்களை திறந்து வைத்த போதே இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
மக்களுக்கான சேவைகள்
‘‘மலையகத்தில் சேவைகளை முன்னெடுப்பதற்கு அரசியல் வாதிகள் தடையாக உள்ளனர் என ஒருவர் கூறியுள்ளார். அவரை வரவேண்டாம் என சொன்னது யார்? மக்களுக்கு சேவை செய்ய முன்வாருங்கள், நாங்களே மாலைபோட்டு வரவேற்பளிக்கின்றோம்.
தோட்டப்பகுதிக்கு வந்து பார்த்தால்தான் காங்கிரஸ் முன்னெடுத்த சேவைகள் தெரியும். மக்களுக்கு தேவையான சேவைகளை அன்று முதல் இன்றுவரை காங்கிரஸ் வழங்கி வருகின்றது.
இந்த நிலையத்தை நிர்மாணிக்க அடிக்கல் நாட்டப்பட்டபோது ஒரு கோடி ரூபா மதிப்பிடப்பட்டது, ஆனால் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலைமையால் ஏற்பட்ட மாற்றங்களால் அதனை முன்னெடுக்க இரண்டரை கோடி ரூபா தேவைப்பட்டது, அமைச்சு பதவியை ஏற்ற பின்னர் அதற்கான ஒதுக்கீடுகளை எமது அமைச்சர் ஜீவன் தொண்டமான் வழங்கியுள்ளார்.
புதிய ஒப்பந்தம்
விலை அதிகரிப்பு என்பதற்காக நாம் திட்டங்களை கைவிடவில்லை. அதேபோல இந்தியா வழங்கவுள்ள 10 ஆயிரம் வீட்டு திட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
அத்திட்டத்துக்கும் ஆரம்பத்தில் 9 லட்சம் ரூபா மதிப்பிட்டப்படது. பின்னர் 28 லட்சம் ரூபா தேவைப்பட்டது, அதற்கான ஒப்பந்தமும் அண்மையில் கைச்சாத்திடப்பட்டது.
மேலும் பல திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடுகளை வழங்க எமது அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
எனவே, ஜனவரி ஆகும்போது திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கும். எமது சமூகத்துக்கு ஒற்றுமை அவசியம். மக்களுக்கான பொது பிரச்சினையின் போது இணைந்து செயற்பட தொழிற்சங்கங்கள் முன்வந்துள்ளன.
அண்மையில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெற்ற சந்திப்பில் இணக்கம் எட்டப்பட்டது." என குறிபிட்டுள்ளார்.


