கிழக்கு மக்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்த அணிதிரளுமாறு அழைப்பு
கிழக்கு மாகாண மக்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்த ஜனநாயக வழியில் மக்கள் கட்சியுடன் அணிதிரளுமாறு முன்னாள் போராளியான ஈழத் தமிழர் முன்னணி கட்சி தலைவர் ஜெயா சரவணன் அழைப்பு விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு கிரானை தலைமையமாக கொண்டு இயங்கிவரும் ஈழத் மிழர் முன்னணி கட்சி நேற்று (03) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் வாழும் அனைத்து மக்களது உரிமைகளையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாத்து ஜனநாயக வழியில் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக 'ஈழத் தமிழர் முன்னணி' என்ற இயக்கம் முறைப்படி உருவாக்கப்பட்டுள்ளது என்பதை இலங்கை மக்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் அறியதருகின்றோம்.
போராட்டம்
எமது அமைப்பின் பெரும்பாலான உறுப்பினர்கள் மற்றும் தளபதிகள், கடந்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து செயல்பட்ட முன்னால் போராளிகளாவர்.

'போராட்டம் என்னும் பெயரால் இழைக்கப்பட்ட தவறுகளும் ஏற்படுத்தப்பட்ட வலிகளும் எமது இதயங்களில் ஆறாத வடுவாக நிலைத்திருக்கும்.
கடந்த காலத்தில் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் பல மனித உரிமை மீறல்களும் சகோதரப் படுகொலைகள் முதல் ஏனைய சகோதர இன மக்களுக்கு எதிரான வன்முறைகள் வரை நடைபெற்ற கொடூரங்களை எமது உறுப்பினர்களை எண்ணி பார்த்து ஆழமாக வருந்துகின்றனர். இந்த வலி எமது வாழ்நாள் இறுதி வரை தொடரும்.
மக்களின் உரிமை
அந்த வகையில் போராட்ட காலத்தில் ஆயுத கலாச்சாரம் தலைதூக்கி இருந்த நேரத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிடமும், இலங்கை வாழ் அனைத்து மக்களிடமும் ஈழத் தமிழர் முன்னணி சிரம் தாழ்த்தி இதயசுத்தியுடன் மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றது.

வன்முறை மற்றும் ஆயுத வழிகளை முற்றாக கைவிட்டு இனிவரும் எமது அரசியல் பயணம் முழுக்க முழுக்க ஜனநாயக வழியில் மட்டுமே இருக்கும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேவேளை மக்களின் உரிமைக்கான ஜனநாயகப் போராட்டங்களை முன்னெடுக்கவும் தார்மீக ஆதரவு வழங்கவும் தயங்கமாட்டோம் என்பதுடன் கல்வி பொருளாதாரம் மற்றும் சமூக கட்டுமானங்களைப் பலப்படுத்தி கிழக்கு மாகாண மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த ஜனநாயக வழியில் மக்களை அணிதிரளுமாறு அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.