அனுராதபுரத்தில் பௌத்த பிக்குவினால் பாதிக்கப்பட்ட சிறுமி! அமைச்சர் வெளியிட்ட கடுமையான அறிவிப்பு
அனுராதபுரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி தொடர்பில் அவதூறான கருத்துக்களை வெளியிட்ட நபர் அதற்கு பொறுப்புக்கூற வேண்டும். இது குறித்து பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை கொழும்பில் உள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது.
இதன்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சரவைப் பேச்சாளர் மேற்கண்டவாறு கூறினார். இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நியாயமாக நடைமுறைப்படுத்தப்படும் சட்டம்
இந்த விடயத்தில் சட்டம் நியாயமாக நடைமுறைப்படுத்தப்படும். பௌத்த பிக்குகளாக இருந்தாலும் நாட்டின் சட்டத்துக்கு முரணாகச் செயற்பட்டால் அவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

"பௌத்த பிக்குகளாக இருந்தாலும், அவர்கள் நாட்டிலுள்ள நடைமுறைச் சட்டத்துக்கு முரணான வகையில் செயற்பட்டால், அவர்களுக்கு எதிராக எவ்வித பாகுபாடுமின்றி நிச்சயம் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தற்போதைய சூழலிலும் கூட, அவ்வாறு சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக எந்தவொரு தடையுமின்றி சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
அனுராதபுரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியை மிக மோசமாக விமர்சித்தமை மற்றும் அவதூறு பரப்பியமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. பொலிஸார் இது குறித்த விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த பொலிஸ் விசாரணைகளின் போது வெளிவரும் உண்மைகளின் முன்னேற்றத்தின் அடிப்படையிலேயே, அடுத்தகட்ட நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் முன்னெடுக்கப்படும்.
நீதிமன்றத்தின் ஊடாக விசாரணை
எவ்வாறாயினும், சமூக ஊடகங்களிலோ அல்லது ஏனைய வழிகளிலோ அவ்வாறு பொறுப்பற்ற முறையில் அவதூறு தெரிவிக்கப்பட்டமையால், பாதிக்கப்பட்ட குறித்த சிறுமிக்கும் அவரது தாய் உள்ளடங்கலான ஒட்டுமொத்தக் குடும்பத்துக்கும் ஏற்பட்டிருக்கக் கூடிய கடுமையான மன உளைச்சல்களுக்கும் சமூகப் பாதிப்புக்களுக்கும், அவ்வாறு கருத்து வெளியிட்ட நபர் சட்டரீதியாகப் பொறுப்பு கூற வேண்டும்.
இதனை மிகச் சாதாரணமான ஒரு விடயமாகக் கருதி, எவரும் இலகுவாகக் கடந்து சென்றுவிட முடியாது. இந்தச் சம்பவம் மற்றும் அதன் பின்னணி தொடர்பில் இதுவரையிலான காலப்பகுதிக்குள் 15 இற்கும் மேற்பட்ட நபர்களிடம் மிக விரிவான வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று பொலிஸார் உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.
முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் முன்னேற்றத் தன்மைக்கு அமைவாக, அடுத்தடுத்து மேலதிக சாட்சிப் பதிவுகளும் இடம்பெறும். நீதிமன்றத்தின் ஊடாக இந்த விடயத்தில் முற்றிலும் நியாயமான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவது உறுதி செய்யப்படும்.
இலங்கைப் பொலிஸாரும், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையும் இதில் முழுமையான ஈடுபாட்டுடன், ஒருங்கிணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன." என்றும் தெரிவித்துள்ளார்.