யாழ். பல்கலையில் பறக்கவிடப்பட்ட கறுப்புக்கொடி: விசாரணைகளை ஆரம்பித்த குற்றப் புலனாய்வுப் பிரிவு
இலங்கையின் சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் தேசியக் கொடி இறக்கப்பட்டு கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட சம்பவம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோரிடம் பொலிஸார் இன்று (10.03.2026) தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.
கறுப்பு கொடி ஏற்றுவதற்கான காரணம்
கடந்த பெப்ரவரி 4ஆம் திகதி நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வின் போது யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட்டிருந்த தேசியக் கொடியை சில மாணவர்கள் கீழே இறக்கி, அதற்குப் பதிலாக கறுப்புக் கொடியை ஏற்றி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் சம்பவம் நடைபெற்றபோது எடுக்கப்பட்ட முக்கியமான புகைப்பட ஆதாரங்கள் மற்றும் சி.சி.டி.வி. காட்சிகளுடன் இன்று(10) பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பல்கலைக்கழகத்தின் உச்ச நிர்வாக அதிகாரி என்ற அடிப்படையில் துணைவேந்தரிடம் சம்பவம் தொடர்பாக நீண்ட நேரம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை
அதேபோன்று, நிர்வாக ரீதியான பொறுப்புக்கூறல் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பாக பதிவாளரிடமும் பொலிஸார் பல்வேறு கேள்விகளை எழுப்பி வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.

கொடியை இறக்கிய மாணவர்கள் யார்? அவர்களைத் தூண்டிவிட்டவர்கள் யார்? என்பது குறித்து பொலிஸார் ஏற்கனவே ஒரு பட்டியலை தயாரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வாக்குமூல பதிவுகளைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் அல்லது கைதுகள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுவதால் பல்கலைக்கழக வட்டாரங்களில் பதற்ற நிலை நிலவி வருவதாக கூறப்படுகிறது.
இலங்கையர்களுக்கு அதிகரிக்கும் சுமை! எரிபொருளை அடுத்து உயரும் சேவைக் கட்டணங்கள் - அரசாங்கத்தின் அறிவிப்பு
மேலதிக தகவல் - ராகேஷ்