விவசாயிகளின் பிரச்சினையை இந்து கிறிஸ்தவ பிரச்சனையாக்க முயற்சி - மன்னார் அரச அதிபர் மற்றும் குரு முதல்வருக்கு எதிராக பிரசுரம்
மன்னார் மாவட்ட குருமுதல்வர் விக்டர்சோசை மற்றும் மாவட்ட அரச அதிபர் ஸ்டான்னி டிமெல் ஆகியோருக்கு எதிராக மன்னார் கோயில் மோட்டை விவசாயிகளால் வவுனியா நகரில் துண்டுப்பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றது.
மன்னார் மாவட்டத்தில் தனியார் நிறுவனமொன்றிற்குக் காணி வழங்கும்
நடவடிக்கைகளுக்கெதிராக கோயில் மோட்டை விவசாயிகளால் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்
ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பின்னர் தற்காலிகமாக அது இடைநிறுத்தப்பட்டது.
இந் நிலையில் அப்பாவி ஏழை விவசாயிகளின் உண்ணாவிரதப் போராட்டத்தை ஒரு மத ரீதியான வன்முறையாக மாற்றி மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் விக்டர் சோசையும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் நந்தினி ஸ்டான்லி டி மெல் அவர்களும் தாம் தப்பிக்க முயற்சித்து வருகிறார்கள்.
எனவே இந்த போராட்டம் தொடர்பான உண்மை பின்னணியை மக்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக இந்த துண்டுப்பிரசுரத்தை வெளியிடுகின்றோம்.
மன்னார் மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கோயில் மோட்டை பகுதியில் உள்ள சுமார் 70 ஏக்கர் அரச காணியில், இப்பகுதி விவசாயிகள் கடந்த 40 வருடங்களாக விவசாயம் செய்து வருகின்ற நிலையில் கடந்த 10 வருடங்களாக முன்னாள் மடு பிரதேச செயலாளர் சத்தியசோதி அவர்களின் வற்புறுத்தலுக்கிணங்க மடு திருத்தல பரிபாலன சபைக்குப் பணமாகவும், நெல் மூட்டைகளாகவும் விவசாயிகள் காணிக்கை கொடுத்து வந்துள்ளனர்.
இதனையடுத்து அந்த காணிகளைத் தனியார் நிறுவனமொன்றிற்கு வழங்குமாறு, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் நந்தினி ஸ்டான்லி டி மெல் அவர்கள் 20.01.2021 அன்று மடு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையிலேயே குறித்த உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்றது. பின்னர் வடமாகாண ஆளுநரின் பிரதிநிதியாக உதவி வடமாகாண காணி ஆணையாளர் வருகை தந்து விவசாயிகளின் பிரச்சனைகளை கேட்டறிந்தார்.
பின்னர் பத்து நாட்களிற்குள் இப்பிரச்சனைக்கான தீர்வினை வழங்குவதாக தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட வடமாகாண பிரதம செயலாளரும் வாக்குறுதியளித்திருந்தார். அதற்கமைய குறித்த போராட்டம் கைவிடப்பட்டது.
எனினும் அப்பாவி விவசாயிகள் வயிற்றுப்பிழைப்பிற்காக முன்னெடுத்த போராட்டத்தை தங்களின் குறைகளை மறைத்து சுயநலத்திற்காக இந்து, கிறிஸ்தவ பிரச்சனையாக மாற்ற குருமுதல்வர் விக்டர்சோசையும், அரச அதிபர் நந்தினி ஸ்டான்லி டிமெல் அவர்களும் முயற்சிசெய்து வருகின்றனர்.
அந்த காணிகளை தங்களின் விருப்பப்படி எடுத்துக்கொள்ளும் நோக்கில் இந்தப்போராட்டம் ஆயர் இல்லத்திற்கு எதிரான போராட்டம் என்று பொய் பிரச்சாரத்தை முன்னெடுத்து ஒற்றுமையைச் சீர்குலைக்கும் செயற்பாட்டினை அவர்கள் இருவரும் முன்னெடுத்து வருகின்றார்கள்.
ஏழை விவசாயிகளிடம் இருந்து காணிகளைப் பறித்து தனியார் நிறுவனத்திற்குக் கொடுப்பது கொடுமையிலும் கொடுமை. இந்தப் போராட்டத்தை முன்னெடுத்த 27 குடும்பங்களில் 20 குடும்பங்கள் கிறிஸ்தவ குடும்பங்களே. விக்டர் சோசை முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீனுடன் இணைந்து அவரது உறவினர்களிற்கு அரச வேலைவாய்ப்புக்கள் உட்பட பல்வேறு சலுகைகளைப் பெற்றுக்கொடுத்தார்.
அதேபோல பல அரசியல் பிரச்சார மேடைகளில் ஏறி தமிழரின் காவலர் றிசாட் எனக் குறிப்பிட்ட இலங்கையின் ஒரே ஒரு அரச ஊழியர் என்ற பெருமையை மன்னார் அரச அதிபர் பெறுவார்.
தமிழ்மக்களுக்காகக் குரல் கொடுத்த முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசெப் அவர்களை பொது மேடைகளிலும், நாடாளுமன்றிலும் இழிவுபடுத்தி வந்த றிசாட் பதியூதீனின் நிகழ்ச்சி நிரலுக்குள் நீங்கள் செயற்படப் போகின்றீர்களா அல்லது நியாயத்தின் பக்கம் நின்று கோவில் மோட்டை விவசாயிகளிற்கு ஆதரவாக செயற்பட போகின்றீர்களா என்று குறித்த பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.