ஏமனில் தடுப்பு முகாம் மீது வான்வழி தாக்குதல்- இதுவரை 70பேர் பலி!
தென் அரேபியா என்று அடையாளப்படுத்தப்படும், ஏமன் நாட்டின் தடுப்பு முகாம் மீது நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வடமேற்கு ஏமனில் உள்ள கிளர்ச்சியாளர் ஹூதி இயக்கத்தின் கோட்டையாக உள்ள சாடாவில் உள்ள முகாம் மீதே இந்த தாக்குதல் நேற்று வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலை, ஹவுதி கிளர்ச்சியாளர்களுடன் சண்டையிடும் சவுதி தலைமையிலான கூட்டணிப் படையினரே மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனிினும் இதனை கூட்டணிப்படைகள் மறுத்துள்ளன.
அத்துடன் தாக்குதல் நடத்தப்படக்கூடாது என்று பட்டியலில் இந்த இடம் குறித்த தகவல் தமக்கு செஞ்சிலுவை சங்கத்தினால் வழங்கப்படவில்லை என்றும் சவுதி தலைமையிலான படைகள் தெரிவித்துள்ளன.
சவூதி தலைமையிலான கூட்டுப் படைகள் 2015 முதல் ஹவுதி கிளர்ச்சியாளர்களுடன் சண்டையிட்டு வருகின்றன.
இதுவரைக்காலத்தில் சண்டைக் காரணமாக 10,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அல்லது காயமடைந்துள்ளனர்.
இந்தநிலையில் நேற்று இடம்பெற்ற தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கை இன்னும் வெளியாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த தாக்குதலை, ஐக்கிய நாடுகள் சபையும் கண்டித்துள்ளது.