நாட்டில் சிறுவர்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள்: வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்
சிறுவர்களுக்கு உரிய நாடொன்று வேண்டும் என அரசியல் மேடைகள்,போராட்டக் களங்களில் கதைத்தாலும் நாட்டுக்கு தகுதியான காயமற்ற சிறுவர்கள் வேண்டும் என எவரும் எங்கும் கதைப்பதில்லை என சிறுவர் துன்புறுத்தல்களுக்கு எதிரான அமைப்பின்(Stop Child Cruelty Trust)தலைவர் வைத்தியர் துஷ் விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
சிறுவர்களுக்கு நடக்கும் கொடுமைகள்
இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தில் நேற்று(29.09.2022) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,“கடந்த 18 மாதங்களில் 12 சிறுவர்கள் உடல், உள ரீதியான தாக்குதல்கள், பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில், 2 வருடங்களில் 17 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்.”என கூறியுள்ளார்.
இதேவேளை 2011ஆம் ஆண்டு தொடக்கம் 2020 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மோசமான பாலியல் துன்புறுத்தல்களுக்கு 30,896 சிறுவர்கள் உள்ளாகியுள்ளனர் என முன்னாள் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,“நாளொன்றுக்கு 8.7 சதவீதமான சிறுவர்கள் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகின்றனர்.
அறிக்கையிடப்படாத சம்பவங்கள்
இவை தவிர குழந்தைகயின் எதிர்காலம், பாடசாலை ,சிறுவர்கள் தமக்கு ஏற்படும் துன்புறுத்தல்கள் குறித்து வெளியில் சொல்லாமை காரணமாக, அறிக்கையிடப்படாத சம்பவங்கள் இதனைவிட அதிகமாக இருக்கலாம்.
இதற்கமையவே எப்பாவெல பிரதேசத்தில் பெற்ற தகப்பன் உள்ளிட்ட உறவினர்கள் 30 பேரால் தொடர்ச்சியாக 6 வருடங்கள் சிறுமியொருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளார்.
மேலும் 18,377பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டாலும் இந்த 9 வருடங்களில் இவர்களுள் 3882 பேரே தண்டனை அனுபவித்துள்ளனர்.”என கூறியுள்ளார்.