மத்திய கிழக்கு போரால் ஆசியாவின் பொருளாதார வளர்ச்சி குறையும்: ஆசிய அபிவிருத்தி வங்கி எச்சரிக்கை
மத்திய கிழக்கு நாடுகளில் நீடித்து வரும் போர்ச் சூழல் காரணமாக, ஆசியப் பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு 4.7 சதவீதமாகவும், அடுத்த ஆண்டு 4.8 சதவீதமாகவும் குறையும் என ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) தனது கணிப்பை மாற்றியமைத்துள்ளது.
முன்னதாக இது 5.1 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போதைய போர்ச் சூழல் எரிபொருள் விலையேற்றம் மற்றும் வர்த்தகப் பாதைகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால் இந்த சரிவு ஏற்பட்டுள்ளது.
பணவீக்க விகிதம் அதிகரிப்பு
அதேபோல், ஆசிய - பசிபிக் பிராந்தியத்தின் பணவீக்க விகிதம் (Inflation) 3.6 சதவீதத்திலிருந்து 5.2 சதவீதமாக உயரும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாடோ காண்டா இது குறித்துக் கூறுகையில், "இது ஒரு தற்காலிக மாற்றமல்ல, உலகளாவிய எரிசக்தி மற்றும் வர்த்தகக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள நீண்டகால பாதிப்பாகும்" எனத் தெரிவித்துள்ளார்.
போர் மேலும் தீவிரமடைந்து மே மாதத்தில் மசகு எண்ணெய் விலை அதிகரித்தால், ஆசியாவின் வளர்ச்சி 4.2 சதவீதமாகக் குறையக்கூடும் என்றும், பணவீக்கம் 7.4 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்பு
ஈரான் மீதான போர் காரணமாக சர்வதேச நாணய நிதியமும் (IMF) உலகளாவிய பொருளாதார வளர்ச்சி குறித்த தனது கணிப்பை ஏற்கனவே குறைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இத்தகைய இக்கட்டான சூழலில், மத்திய வங்கிகள் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும், சந்தை நிலையின்மையைத் தவிர்ப்பதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என ஆசிய அபிவிருத்தி வங்கி வலியுறுத்தியுள்ளது.