கூட்டுப் பொறுப்பும் முன்கூட்டிய தயாரிப்புமற்ற புதுடில்லி சந்திப்பு

Sri Lanka Politician Sri Lanka India
By A. Nixon Dec 05, 2023 09:13 PM GMT
Report
Courtesy: கூர்மை

ஜே.வி.பியின் அரசியல் கொள்கைகள் ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்கு ஏற்புடையதல்ல. ஆனால் கட்சி அரசியலுக்குரிய அத்தனை பண்புகளையும் ஜே.வி.பியின் அடித்தள உறுப்பினர்கூட பின்பற்றும் ஒழுக்கம் முதன்மை பெறுகின்றது.

கட்சித் தலைமைக்குத் தெரியாமல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதுவர்களைச் சந்திப்பதில்லை. நாடாளுமன்ற விவாதங்களில் ஒவ்வொரு விடயதானங்களிலும், தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் மாத்திரமே உரையாற்றுவர்.

எல்லா விடயங்களையும் எல்லா உறுப்பினர்களும் தாம் நினைத்தபாட்டிற்குப் பேச முடியாது. தேர்தலில்கூட போட்டியிடும் உறுப்பினர்கள் கட்சியின் சின்னத்தை மாத்திரமே பிரச்சாரப்படுத்துவர்.

விருப்பு இலக்கங்களை ஜே.வி.பி வேட்பாளர்கள் எவரும் தேர்தல் பிரச்சாரத்தின்போது விளம்பரப்படுத்துவதில்லை. கட்சியின் கூட்டுப் பொறுப்பும் கட்சிக்கான முன்னுரிமையும் மட்டுமே தேர்தல் பிரச்சாரங்களில் பிரதான வகிபாகமாக இருக்கும்.

ஆயுதப் போராட்டம் ஒன்றின் ஊடாக வளர்ச்சியடைந்த கட்சி என்ற கட்டுப்பாடும் ஒழுக்கமும் ஏனைய பிரதான சிங்களக் கட்சிகளைவிடவும் ஜே.வி.பியிடம் புனிதமடைகிறது. ஆனால் எண்பது வருட அரசியல் விடுதலைப் போராட்ட அனுபவம் கொண்ட ஈழத் தமிழ்ச் சமூகத்தின் பழமைக் கட்சியான தமிழரசுக் கட்சியில் "கட்டுப்பாடு" "ஒழுக்கம்" என்ற முதன்மைப் பண்பு இருப்பதாகத் தெரியவில்லை. யாரும் யாருக்கும் கட்டுப்படுவதில்லை.

புலம்பெயர் அமைப்புகளின் விருப்பங்கள்

ஆயுதப் போராட்டம் நடத்திப் பின்னர் ஜனநாயக வழியில் அரசியலில் ஈடுபடும் ரெலோ, ஈபிஆர்எல்எப், புளொட் போன்ற இயக்கங்களிடமும் தத்தமது நோக்கங்களுக்குரிய ஒழுக்கத்தைக் காணவில்லை. மாறாகத் தனித்தனி அரசியல் ஈடுபாடும், இந்திய அரசின் சுழிவு நெழிவுகளுக்கு அமைவாக வளைந்து கொடுக்கும் வியூகங்கள் மாத்திரமே விஞ்சிக் கிடக்கின்றன.

கூட்டுப் பொறுப்பும் முன்கூட்டிய தயாரிப்புமற்ற புதுடில்லி சந்திப்பு | Article About Srilanka And Indian Politics

2009 இற்குப் பின்னரான சூழலில் தனித்தனிக் குழுக்களாகவும் தனி நபர்களாகவும் பிரிந்து நிற்பதன் பின்னணி என்ன? வல்லாதிக்கச் சக்திகளின் பிரித்தாளும் தந்திரங்களுக்குள் உட்பட்டமைக்கான உள் நோக்கம் என்ன? ஒவ்வொரு தமிழ்த்தேசியக் கட்சிகளின் உறுப்பினர்களும் தத்தமது தலைமைக்குத் தெரியாமல் அல்லது தத்தமது கட்சிகளின் மத்திய குழுக் கூட்டங்களில் தீர்மானம் அல்லது குறைந்தபட்சம் உரையாடாமல் கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதுவர்களைத் தனியாகச் சந்திப்பதற்குரிய காரண காரியம் என்ன? "தமிழ்த்தேசியம்" என்பதைக் கருப் பொருளாகக் கொண்டு தனிநபர் முயற்சியுடன் சில புலம்பெயர் அமைப்புகளின் விருப்பங்கள் தேவைகளுக்கு ஏற்பச் செயற்பட்டு பிரபல்யம் அடைவது மாத்திரமே இங்கு முதன்மை நோக்கமாகிறது.

இதன் மூலம் தத்தமது செல்வாக்குகளை அதிகரித்து இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்ற ஆசனத்தைக் கைப்பற்றும் தனிப்பட்ட உத்தி என்ற வியூகங்களைத் தவிர ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை என்ற ஒட்டுமொத்தச் சிந்தனை எவரிடமும் இருப்பதாகத் தெரியவில்லை. வெவ்வேறு கட்சிகளாக இயங்கினாலும் தமிழர் விவகாரத்தைக் கையாள பொதுப் பொறிமுறை ஒன்றை அமைத்து ஒருமித்த குரலில் செயற்பட வேண்டுமென இப் பத்தியில் ஏற்கனவே பல தடவைகள் ஆலோசனைகள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.

வேறு சில அரசியல் பத்தி எழுத்தாளர்கள் மற்றும் தமிழ்ப் புத்திஜீவிகள் எனப் பலரும் ஒருமித்த குரலில் செயற்பட வேண்டுமென வலியுத்தியுமுள்ளனர். சென்ற 19 ஆம் திகதி கட்சிகளின் ஐக்கியத்தை வலியுறுத்தி யாழ் நகரில் கூட்டம் ஒன்றும் நடைபெற்றிருந்தது.

தமிழ்த்தேசியக் கட்சிகளின் தலைவர்கள் பிரதிநிதிகள் பலரும் கூட்டத்தில் பங்குபற்றியிருந்தனர். ஆனாலும் மீண்டும் மீண்டும் தனித்தனிச் செயற்பாடுகளே மேலோங்கி வருவதை அவதானிக்க முடிகிறது. குறிப்பாக "வடக்கு கிழக்கு அரசியல் சிவில் புலம்பெயர் அமைப்பு" என்ற பெயரில் சென்ற வாரம் புதுடில்லிக்குச் சென்ற குழு ஒன்று அங்கு பல சந்திப்புக்களில் ஈடுபட்டுள்ளது.

இக் குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ். சிறிதரன், க.வி.விக்னேஸ்வரன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா. சிறிநேசன் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் சென்றிருக்கின்றனர். இவர்களுடன் அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸின் தலைவர் கிருஸ்ணபிள்ளை இளங்கோ அமெரிக்க தமிழர் ஐக்கிய அரசியல் செயற்குழுவின் செயலாளர் கலாநிதி. தமோதரம்பிள்ளை சிவராஜ் அமெரிக்கத் தமிழ் செயற்குழுவின் செயலாளர் சுந்தர் குப்புசுவாமி, உலக சமூக சேவை மையத்தின் அறங்காவலர் ஆர்.சி.கதிரவன் மற்றும் ஏற்கனவே சிவில் சமூக அமைப்பாக இயங்கி வரும் துரைசாமி, வேலன் சுவாமிகள் ஆகியோரும் பங்குபற்றியதாக கொழும்பில் இருந்து வெளிவரும் வீரகேசரி நாளிதழ் கடந்த வியாழக்கிழமை செய்தி வெளியிட்டிருந்தது.

இரகசியம் காத்ததன் பின்னணி என்ன?

ஆகவே சிறிதரன் இக் குழுவுடன் புதுடில்லிக்குச் சென்றமை தமிழரசுக் கட்சியின் தலைமைக்குத் தெரிந்திருந்ததா? தமிழர்களின் விவகாரம் பற்றிப் பேசப் போகிறார் என்றால் கட்சியின் மத்திய குழுவில் அல்லது கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவுடன் கலந்துரையாடினாரா? அல்லது சிறிதரனைத்தான் இச் சந்திப்புக்கு அனுப்புவது என்று தமிழரசுக் கட்சியின் மத்திய குழு தீர்மானம் எடுத்ததா? அதேபோன்று விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளர் என்ற முறையில் கூட்டணியின் பிரதிநிதிகளுடன் புதுடில்லிக்குச் செல்வது பற்றிக் கலந்துரையாடினாரா? வேறு எவரிடமாவது ஆலோசனை பெற்றாரா? சிறிதரனுக்கும் விக்னேஸ்வரனுக்கு இடையே டில்லியில் சந்திப்பது பற்றிய புரிதல் ஏலவே இருந்ததா?

கூட்டுப் பொறுப்பும் முன்கூட்டிய தயாரிப்புமற்ற புதுடில்லி சந்திப்பு | Article About Srilanka And Indian Politics

அல்லது ஏற்கனவே இருவரிடமும் ஒருமித்த இணக்கம் இருந்ததா? திடீரென எப்படி புரிதல் ஏற்பட்டது? அல்லது சென்ற 19 ஆம் திகதி யாழ் நகரில் கட்சிகளின் ஐக்கியத்தை வலியுறுத்துவதாக மார்தட்டி நடத்தப்பட்ட கூட்டத்தில் பங்குபற்றிய சிறிதரன் யாரிடமாவது டில்லிச் சந்திப்புப் பற்றிக் கசியவிட்டார? சிறிதரனும் விக்னேஸ்வரனும் டில்லிச் சந்திப்புப் பற்றி இரகசியம் காத்ததன் பின்னணி என்ன? டில்லிக்குச் செல்வதற்கு முன்னர் சிறிதரனும் விக்னேஸ்வரனும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உட்பட அனைத்துத் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய தமிழ்ப் பிரமுகர்கள் எவருடனும் கலந்துரையாடினரா? இக்குழுவில் சென்ற ஏனைய பிரநிதிகள்கூட இது பற்றிச் சிந்தித்தார்களா?

எந்த அடிப்படையில் டில்லியில் பேசுவது? அரசியல் தீர்வாக முன்வைக்க வேண்டிய பிரதான கருப்பொருள் என்ன என்று ஏதேனும் முன்கூட்டிய ஒழுங்குபடுத்தல், தயாரிப்புகள் இருந்ததா? பதின்மூன்றை நடைமுறைப்படுத்துமாறு கோரவும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துமாறு வலியுறுத்தவும் ஏன் டில்லிக்குப் போக வேண்டும்? இந்திய இலங்கை ஒப்பந்தத்தை இரண்டு அரசுகளும் தத்தமது தேவைக்கு ஏற்ப 2009 இற்குப் பின்னர் அவ்வப்போது மிக இரகசியமாகப் பயன்படுத்தி வரும் நிலையில், அந்த ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கோர இவர்கள் யார் என்று புதுடில்லி தன் மனதுக்குள் கிண்டலாகக் கேட்டிருக்கும் அல்லவா?

ஆகவே எண்பது வருட அரசியல் போராட்டத்திற்கான தீர்வு பற்றிய கூட்டுத் தயாரிப்புகள் எதுவுமே இல்லாமல் ஆங்காங்கே குறிப்பிட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்களையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரையும் மற்றும் வேறு சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளையும் தனித்தனியாக அழைத்துக் கொண்டு புதுடில்லிக்குச் சென்றமை நேர்மையான தமிழ்த் தேசிய நிகழ்ச்சி நிரலா? இந்த வருடம் ஜனவரி மாதம் ஜனநாயகப் போராளிகள் கட்சியும் மற்றும் சில புலம்பெயர் அமைப்புகளின் பிரதிநிதிகளும் டில்லிக்குச் சென்று ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பான மாநாடு ஒன்றை நடத்தியிருந்தனர்.

 சர்வதேச விசாரணை

அந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் பேசப்பட்ட விடயங்கள் பற்றிய தொடர்ச்சி என்ன? வெறுமனே ஒரு மாநாட்டோடு மாத்திரம் அந்த நிகழ்ச்சி நின்று விட்டதா? அல்லது இந்த மாநாட்டின் தொடர்ச்சியாகத்தான் சென்றவாரம் புதுடில்லியில் சிறிதரன் விக்னேஸ்வரன் குழுவினர் இந்திய அதிகாரிகளைச் சந்தித்தனரா? பதின்மூன்றை ஆரம்பப் புள்ளியாக ஏற்று அதனை நடைமுறைப்படுத்துமாறு கோரி கடந்த ஆண்டு யூன் மாதம் ஆறு தமிழ்த்தேசியக் கட்சிகள் மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தன. மோடிக்குக் கடிதம் எழுதும் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது சட்டத்தரணிகளான சுமந்திரன் கனகஈஸ்வரன் உள்ளிட்ட குழுவினர் அமெரிக்காவுக்குச் சென்று பேச்சு நடத்தியிருந்தனர். மீண்டும் கொழும்புக்குத் திரும்பிய சுமந்திரன், ”மோடிக்குக் கடிதம்” எழுதும் கூட்டத்தில் பங்குபற்றியிருந்தார்.

புதிய விடயங்களைக் கடிதத்தில் புகுத்தினார். ஆனால் அந்தக் கடிததத்திற்கு இன்றுவரையும் கிடைத்த பதில் என்ன? அதன் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட அரசியல் வேலைத் திட்டம் என்ன? 2021 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் "வட்டுக்கோட்டைத் தீர்மானம் இரண்டு" என்று மாநாடு சென்னையில் இடம்பெற்றது. பழநெடுமாறன், காசி ஆனந்தன் மற்றும் தமிழகத்தின் பிரபல தமிழ்த்துறை சார்ந்த பேராசிரியர்கள், வல்லுநர்கள் பலரும் பங்குபற்றினர். சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்குமாறு கோரி மோடிக்குக் கடிதமும் அனுப்பியிருந்தனர்.

கூட்டுப் பொறுப்பும் முன்கூட்டிய தயாரிப்புமற்ற புதுடில்லி சந்திப்பு | Article About Srilanka And Indian Politics

ஆகவே இந்த மாநாட்டு முடிவின் தொடர்ச்சியாகவே புதுடில்லியில் மேற்படி சந்திப்புகள் இடம்பெற்றதா? அல்லது இவை ஒவ்வொன்றும் வெவ்வேறுபட்ட தனித்தனி நிகழ்ச்சி நிரல்களா? ஆனால் ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை பற்றிய பேச்சு என்பது ஒற்றை வார்த்தையில் உள்ளதே! அதாவது 1958 இல் இருந்து 2009 மே மாதம் வரையும் அதன் பின்னரான பௌத்த மயமாக்கல், காணி அபகரிப்புகள் போன்ற தொடர்ச்சிகளைப் பிரதானப்படுத்தி 'இன அழிப்பு' என்பதற்கான சர்வதேச விசாரணையை ஒற்றை வார்த்தையில் ஒரு மித்த குரலாக வற்புறுத்தினால் சுயநிர்ணய உரிமைக்கான அங்கீகாரம் இயல்பாக வெளிப்படும். ஆனால் இவை பற்றிய பேச்சுக்கள் கைவிடப்பட்டுள்ளன.

குறைந்த பட்சம் ஜெனீவா மனித உரிமைச் சபைத் தீர்மானத்துக்கு ஏற்ப சர்வதேச கலப்புமுறைப் போர்க்குற்ற விசாரணைக்குரிய அழுத்தங்களைக் கூட ஒருமித்த குரலில் தமிழ்த் தேசியக் கட்சிகள் தொடராக வலியுறுத்தத் தவறியுள்ளன. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் நாடாளுமன்ற ஆசனங்களை அதிகரிக்கும் வியூகங்களில் மாத்திரமே கவனம் செலுத்துகின்றது.

தமிழ்த்தரப்பின் கூட்டுப் பொறுப்பு

ஆகவே குறைந்த பட்சம் கட்சி அரசியலுக்குரிய பண்புகள்கூட இல்லாத நிலையில் கூட்டுச் செயற்பாடுகளை தமிழ்த்தேசியக் கட்சிகளிடம் மக்கள் எதிர்பார்க்கவே முடியாது என்பது இங்கே பட்டவர்த்தனமாகிறது. இப் பலவீனங்களை மதிப்பீடு செய்தே சில குழுக்கள் தமிழ்த்தேசியக் கட்சிகளையும் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் எனப்படும் சில உறுப்பினர்களையும் நன்கு திட்டமிட்டுப் பிரித்தாளுகின்றன.

இப் பின்னணியிலேதான் புதுடில்லியில் அவ்வப்போது இடம்பெறும் தனித்தனிச் சந்திப்புக்களையும் மாநாடுகளையும் அவதானிக்க வேண்டும். துவாரகாவின் பெயரில் வெளியான போலி மாவீரர் உரை பற்றிய பரபரப்புகளும் இப் பலவீனங்களை மையமாகக் கொண்டே தயாரிக்கப்பட்டிருப்பதையும் நோக்கலாம். ஆகவே "தமிழ்த்தேசியக் கோட்பாடு" என்பதை "சிதைப்பது" "திசை திருப்புவது" என்ற நச்சுத் திட்டங்கள் மாத்திரமே 2009 இற்குப் பின்னரான சூழலில் பல வடிவங்களில் தொடர்ச்சியாக அரங்கேற்றப்படுகின்றன.

இந்த நிலையில் "இலங்கை அரசு" என்ற கட்டமைப்பைத் திருப்திப்படுத்தித் தமது புவிசார் அரசியல் பொருளாதார நலன்களுக்கு ஏற்ப இந்திய மத்திய அரசு இயங்கி வருகிறது. தமிழர்களின் கூட்டுப் பொறுப்பற்ற அரசியல் செயற்பாடுகளை இந்தியா தமக்கேற்ற முறையில் நன்கு பயன்படுத்தியும் வருகின்றது. இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் வல்லரசாக மாறத் துடிக்கும் இந்தியா, தன்னிலை சார்ந்துதான் செயற்படும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆகவே இந்தியாவைத் தமக்கேற்ற முறையில் கையாள வேண்டியது தமிழ்த்தரப்பின் கூட்டுப் பொறுப்பு.

1987 இல் இந்திய - இலங்கை ஒப்பந்த்தின் போதும் 2009 போரின் போதும் சிங்கள அரசியல் தலைவர்கள் இந்தியாவைத் தமக்கு ஏற்ற முறையில் கையாண்டனர். 2009 மே மாதத்தின் பின்னரான கடந்த பதின் நான்கு வருடங்களிலும் சிங்கள ஆட்சியாளர்கள் இந்தியாவை ஈழுத்தமிழர் பக்கம் சென்றுவிடாமல் காய் நகர்த்துகின்றனர். டில்லியைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தியமை பற்றி மகிந்த ராஜபக்சவின் முன்னாள் செயலாளர் லலித் வீரதுங்க நேர்காணல் ஒன்றில் கூறியமை பற்றி இப் பத்தியில் ஏலவே சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை ரத்துச் செய்ய வேண்டும் எனக் கூறிய மிலிந்த மொறெகாட அமைச்சவை அந்தஸ்துடன் இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவராகப் பதவி வகிக்கிறார்.

தமிழ் நாட்டையும் புதுடில்லியின் நிலைப்பாட்டுக்கு ஏற்ப மாற்றியமைக்கும் பல அரசியல் வேலைகளில் மிலிந்த மொறகொட ஈடுபடுகிறார் என்பதை டில்லியில் சந்திப்பு நடத்திய பிரதிநிதிகள் புரிந்துகொள்ளவில்லை என்பதுதான் வேடிக்கை. புரிந்திருந்தால் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துமாறும் பதின்மூன்றுக்கு ஏற்ப மாகாண சபைத் தேர்தல்களை நடத்துமாறும் புதுடில்லிச் சந்திப்புகளில் இவர்கள் கோரியிருக்க மாட்டார்கள். டில்லியில் நடந்த பல சந்திப்புகளிலும் பிரதமர் மோடியை அல்லது வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்திக்க எவருக்குமே அனுமதி வழங்கப்படவில்லை. ஆகவே மூன்றாம் தரச் சந்திப்புகள்தான் (Third-Class Encounter) இவை. பா.ஜ.க முகவர்கள் ஊடாக ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என்பதும் பகிரங்கமானது.


பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் A. Nixon அவரால் எழுதப்பட்டு, 05 December, 2023 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bünde, Germany, Selm, Germany

11 Jul, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை வடக்கு

11 Jul, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வாழைச்சேனை, Toronto, Canada

10 Jul, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பேர்ண், Switzerland

12 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், பிரான்ஸ், France

10 Jul, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Toronto, Canada

07 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US