அடக்கு முறையை கையாள தயாராகும் அநுர அரசு : முஜிபுர் ரஹ்மான் பகிரங்கம்
அநுர அரசு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களின் எதிர்ப்பைச் சமாளிக்க அடக்குமுறைகளைக் கையாளத் தயாராகி வருகின்றது. இதனால் எதிர்வரும் மே அல்லது ஜூன் மாதங்களில் இந்த அரசுக்கு எதிராக பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று (09.02.2026) திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் குறிப்பிட்ட அவர்,
பாரம்பரிய தபால்
அரசு தபால் கட்டணத்தை 20 ரூபாவால் அதிகரித்து, குறைந்தபட்ச முத்திரைக் கட்டணத்தை 70 ரூபாவாக மாற்றியுள்ளது.
இன்றைய நவீன தொழில்நுட்பக் காலத்தில் தபால் சேவையைப் பயன்படுத்துவோர் குறைந்துள்ள நிலையில் இந்த விலையேற்றம் பாரம்பரிய தபால் முறையை மேலும் முடக்கும் செயலாக அமையும்.

வாழ்க்கைச் செலவைக் குறைப்பதாக வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த ஜே.வி.பி. தலைமையிலான அநுர அரசு, இன்று மிக வேகமாக விலைகளை உயர்த்தி வருகின்றது.
2027ஆம் ஆண்டு வரை சம்பள உயர்வு வழங்க முடியாது என ஜனாதிபதி கூறுவது தேர்தல் மேடைகளில் அவர் அளித்த வாக்குறுதிகளுக்கு எதிரானது என்பதை நினைவுபடுத்துகின்றோம்.
சுகாதாரம், கல்வி, கடற்றொழில் மற்றும் விவசாயத் துறைகளில் பல்வேறு போராட்டங்கள் வெடித்துள்ளன. அத்தோடு அரசைக் கொண்டுவர உதவிய அதே தரப்பினர் இன்று அரசின் செயல்பாடுகளால் அதிருப்தியடைந்து வீதிக்கு வரத் தொடங்கியுள்ளனர்.
நியாயமான விலை
நாட்டில் தற்போது அவசரகாலச் சட்டத்தை நீடிக்க வேண்டிய அவசியம் எதுவுமில்லை ஆனால் அரசு அதைச் செய்துள்ளது.
எதிர்வரும் மே, ஜூன் மாதங்களில் ஏற்படக்கூடிய மக்கள் போராட்டங்களையும், வேலைநிறுத்தங்களையும் அடக்குமுறை மூலம் ஒடுக்குவதற்காகவே அரசு இந்த அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

நெல் விவசாயிகளுக்கான நியாயமான விலை வழங்கப்படாமை மற்றும் களஞ்சியசாலைகள் மூடப்பட்டிருப்பது போன்ற சிக்கல்கள் காரணமாக விவசாயிகளும் போராட்டத்துக்குத் தயாராகி வருகின்றனர்.
அரிசி இறக்குமதி செய்ய மாட்டோம் என்று கூறிவிட்டு தற்போது அரிசியை இறக்குமதி செய்ய அரசு தீர்மானித்துள்ளது.
இவ்வாறான தன்னிச்சையான தீர்மானங்களுக்கு எதிராக சகல துறைகளிலிருந்தும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தயாராகி வருகின்றன.
இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு அரசும் இன்றிலிருந்தே தயாராகி வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.