ஓட்டமாவடியில் 111 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை - இருவருக்கு தொற்று உறுதி
நாட்டில் பயணத்தடை அமுலிலுள்ள நிலையில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் நேற்று மேலெழுவாரியாக 111 நபர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கோவிட் தொற்றாளர்கள் இணங்காணப்பட்ட நிலையிலும், நாட்டில் பயணத்தடை விதிக்கப்பட்ட நிலையிலும், மேலெழுவாரியாக ஓட்டமாவடி பிரதேசத்தில் சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் பி.சி.ஆர். மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.
அந்த வகையில் நாட்டில் பயணத்தடை விதிக்கப்பட்ட நிலையில், கோவிட் சட்டத்தினை மதிக்காது மற்றும் முகக்கசவம் அணியாது வீதிகளில் பயணம் செய்தவர்கள் மற்றும் கோவிட் தொற்றுக்குள்ளானவர்களின் உறவினர்கள் என 111 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை பெறப்பட்டது.
இந்நிலையில், இரண்டு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.
குறித்த அன்டிஜன் பரிசோதனையில்; மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதர் ஏ.எல்.நௌபர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், வாழைச்சேனை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.