சுரேஷ் சலே உயிர்த் தியாகம் செய்யவும் தயார் : முன்னாள் எம்.பி தெரிவிப்பு
புலனாய்வு தகவல்களை பாதுகாப்பதற்காக தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஸ் சலே உயிரையும் தியாகம் செய்யத் தயாராக உள்ளார் என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் சலே தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தற்போது கடுமையான உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் சட்டப்படி நடவடிக்கை
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே சரத் வீரசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமக்கு அவரை நேரில் சென்று பார்க்க வாய்ப்புக் கிடைக்கவில்லை எனவும், ஆனால் சலேயின் மனைவியும் மகனும் அவரைச் சென்று பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தமக்குத் தெரிந்த புலனாய்வுத் தகவல்களைத் தேவையற்ற தரப்பினருக்கு வழங்கக் கூடாது என்பதில் சுரேஷ் சலே மிக உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொள்கை ரீதியான காரணத்திற்காக அவர் தற்போது உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் எனவும் தனது உயிர் போனாலும், தேசத்தின் பாதுகாப்பைக் காட்டிக்கொடுக்க மாட்டேன், தேவையற்றவர்களுக்குப் புலனாய்வுத் தகவல்களை வழங்க மாட்டேன் என்பதே அவரது நிலைப்பாடாகும். நாட்டின் மீதும் தேசியப் பாதுகாப்பின் மீதும் பற்றுக்கொண்ட ஒரு தேசப்பற்றாளர் தான் இப்படிச் செய்வார் என பாராட்டியுள்ளார்.
இது மிகவும் துரதிர்ஷ்டவசமான நிலை. அவர் உயிர் வாழ வேண்டும். தயவுசெய்து உணவை உட்கொண்டு தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளுமாறு அவரிடமும் அவரது மனைவியிடமும் தாம் கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
அப்போதுதான், அவருக்கு எதிராக அநீதியாகச் செயல்படுபவர்களுக்கு எதிராக எங்களால் எதிர்காலத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும் என சரத் வீரசேகர மேலும் தெரிவித்துள்ளார்.
பார்த்தாலே பசி எடுக்கும் மொச்சைப் பருப்பு கருவாட்டு குழம்பு : இப்படி செய்தா கொஞ்சமும் மிஞ்சாது! Manithan