செப்டெம்பர் 22இல் ஆட்சியை விரட்ட மாபெரும் மக்கள் போராட்டம்! சம்பிக்க பகிரங்கப் பிரகடனம்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அரசுக்கு இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகும் எதிர்வரும் செப்டெம்பர் 22ஆம் திகதி, இந்த ஆட்சியை விரட்டியடிப்பதற்கான மாபெரும் மக்கள் போராட்டத்தை நாங்கள் வீதியில் இறங்கி ஆரம்பிப்போம் என்று ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
"பொய்யையும் திருட்டையும் ஒன்றாக தோற்கடிப்போம்" எனும் தொனிப்பொருளில் கூட்டு எதிர்க்கட்சிகள் இணைந்து கம்பஹா, ஜா-எல பிரதேசத்தில் நடத்திய பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த அதிரடிப் போராட்டப் பிரகடனத்தை அறியப்படுத்தினார்.
இந்த அரசு ஆட்சிக்கு வந்து 18 மாதங்கள் கடந்துள்ள போதிலும், அவர்களால் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்ட அனைத்து வேலைத்திட்டங்களும் இன்று முற்றாகத் தோல்வியடைந்துள்ளன என்றும் சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டினார்.
அரசாங்கத்தின் தவறுகள்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"தூய்மையான நாட்டை உருவாக்குவதாகக் கூறி ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டத்துக்கு மக்களின் எதிர்ப்பு கிளம்பியதால், அது தற்போது செயலிழந்து போயுள்ளது. இதன் விளைவாக இன்று நகரெங்கும் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன.
சம்பத் மனம்பேரி என்பவருக்குச் சொந்தமான போதைப்பொருள் அடங்கிய 2 கொள்கலன்கள் கைப்பற்றப்பட்டன என்று பாரிய விளம்பரம் செய்யப்பட்டது.
ஆனால், அவை சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட அதே காலப்பகுதியில்தான் விடுவிக்கப்பட்டுள்ளன.
அதேபோல் நுவரெலியாவில் ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய நிறுவனம் குறித்தோ, கடல் மார்க்கமாகக் கடத்தப்பட்டு 'சாந்த' என்பவருக்குச் சொந்தமானது எனத் தெரியவந்த 2 லொறி போதைப்பொருள்கள் குறித்தோ தற்போது எவ்வித விசாரணைகளும் இல்லை.
'டித்வா' புயல் அனர்த்தம் ஏற்பட்டு 6 மாதங்கள் கடந்தும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் இன்னும் சீரமைக்கப்படவில்லை. தொடருந்து பாதைகளும் திருத்தப்படாமல் முடங்கிக் கிடக்கின்றன.
வாகன இறக்குமதி
வாகன இறக்குமதி வரி அதிகரிப்புக்கு விடுக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்குப் பின்னால் பாரிய ஊழல் மோசடி ஒளிந்திருக்கின்றது.வாகன இறக்குமதிக்கான வரியை 50 வீதத்தால் அதிகரித்து ஜனாதிபதி வர்த்தமானி வெளியிடுவதற்கு ஒரு நாளைக்கு முன்னர், அரசுக்கு நெருக்கமான குறிப்பிட்ட சில வர்த்தகர்களுக்கு மட்டும் அந்தத் தகவல் முன்கூட்டியே கசிந்துள்ளது.
சாதாரணமாக நாள் ஒன்றுக்கு 2.2 மில்லியன் டொலருக்கு மட்டுமே வாகன இறக்குமதிக்கான வங்கி கடன் பற்றுப்பத்திரங்கள் திறக்கப்பட்டு வந்த பின்னணியில், இந்த வர்த்தமானி வருவதற்கு முந்தைய 3 நாள்களில் மட்டும் திடீரென 43 மில்லியன் டொலருக்கு எல்.சி திறக்கப்பட்டுள்ளது.

அநுரகுமாரவின் அரசிலும் தமக்கு நெருக்கமான உற்ற நண்பர்களுக்குச் சலுகை வழங்கும் 'குரோனி கலாசாரம்' தடையின்றி அரங்கேறுகின்றது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான டொலர் தட்டுப்பாடு மற்றும் நாளுக்கு நாள் டொலருக்கு நிகரான ரூபாவின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதற்கு மத்திய கிழக்கு யுத்தத்தைக் காரணம் காட்டி அரசு தப்பிக்க முயல்கின்றது.
மத்திய கிழக்கு யுத்தம் அல்ல, அரசின் பிழையான பொருளாதார முகாமைத்துவமே டொலர் நெருக்கடிக்கு உண்மையான காரணம். பொருள்களின் விலையேற்றத்தால் மக்கள் வாழ முடியாத நிலையை இந்த அரசு தோற்றுவித்துள்ளது.
எதிர்க்கட்சிகளின் போராட்டங்களை ஒடுக்குவதற்காக விடுக்கப்படும் அச்சுறுத்தல்களுக்கு நாம் பணியப்போவதில்லை. எதிர்வரும் செப்டெம்பர் 22 இல் இந்த ஆட்சிக்கு எதிராக நாங்கள் தொடங்கும போராட்டத்தை முடக்க எங்களைச் சிறையில் அடைக்கலாம் அல்லது எமது பிரஜா உரிமைகளை இல்லாமல் செய்து எங்களை அச்சுறுத்த நினைக்கலாம்.
ஆனால், தற்போதைய கூட்டு எதிர்க்கட்சியினர் எதற்கும் அச்சப்படப் போவதில்லை. அரசால் பாதுகாக்கப்பட்ட போதைப்பொருள் வியாபாரிகள் அனைவரையும் ஒருநாளில் நாங்கள் சட்டத்தின் முன் நிறுத்துவது உறுதி என குறிப்பிட்டுள்ளார்.
தாஜுதீன் கொலை வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட மகிந்த ராஜபக்சவின் வீடு: கோப் குழுவில் வெளியான சர்ச்சைக்குரிய தகவல்
இதுதான் உங்க குழந்தை இல்லையே.. தங்கமயில் சொன்ன வார்த்தையால் அதிர்ச்சியில் சரவணன்! பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் Cineulagam