வெளிநாடுகளில் பரவும் மற்றுமொரு நோய்த்தொற்று - 130 பேருக்கு மேல் மரணிக்கும் அபாயம்
கொங்கோ ஜனநாயகக் குடியரசின் (DRC) கிழக்குப்பகுதியில் 130க்கும் மேற்பட்டோரின் மரணத்திற்குக் காரணமான “எபோலா வைரஸ் தொற்று” கடந்த இரண்டு மாதங்களாக பரவி வந்திருக்கலாம் என்றும் அதன் பாதிப்பு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது.
இது தொடர்பில் செய்தியாளர்கள் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அதிவேகமாகப் பரவக்கூடிய மற்றும் அரிதான “புண்டிபுகியோ” என்ற எபோலா வைரஸ் வகையால் இந்தத் தொற்று ஏற்பட்டுள்ளது. இதற்கான பிரத்தியேகத் தடுப்பூசிகள் தற்சமயம் பயன்பாட்டில் இல்லாததால் நிபுணர்கள் பெரும் கவலை வெளியிட்டுள்ளனர்.
மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதியில் வாரக்கணக்கில் இந்தத் தொற்று கண்டறியப்படாமல் பரவியதே பாதிப்பு தீவிரமடையக் காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்றுநோயின் தீவிரம்
இதன்படி, முதல் மரணம் ஏப்ரல் 20ஆம் திகதி நிகழ்ந்திருக்கலாம் என்றும், தொடர்ந்து ஒரு இறுதிச்சடங்கிலோ அல்லது மருத்துவமனையிலோ இந்த வைரஸ் பெருமளவில் பலருக்குப் பரவியிருக்கலாம் என்றும் உலக சுகாதார அமைப்பு கருதுகிறது.

ஆரம்பத்தில் மாதிரிகளைச் சோதித்த மருத்துவப் பணியாளர்கள், அது 'ஜைர்' வகை எபோலா இல்லை என்று வந்தவுடன், அடுத்தகட்ட தீவிரச் சோதனைக்கு அனுப்பத் தவறியதே இந்தத் தாமதத்திற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெரகோஸ் அதானோம் கெப்ரேயேசஸ் கூறுகையில், இதுவரை 600 பேருக்குத் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் வேளையில், 139 மரணங்கள் பதிவாகியுள்ளன. ஆய்வகச் சோதனைகள் மூலம் கொங்கோவில் 51 பேருக்கும், அண்டை நாடான உகாண்டாவில் இரண்டு பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இச்சூழ்நிலையைச் சர்வதேசக் கவலைக்குரிய பொது சுகாதார அவசரநிலையாக (PHEIC) உலக சுகாதார அமைப்பின் அவசரநிலைக் குழு பிரகடனப்படுத்தியுள்ளது.
இறப்பு வீதம் அதிகரிக்க வாய்ப்பு
இந்தத் தொற்றின் சராசரி இறப்பு விகிதம் 40 சதவீதமாக உள்ளது. இதற்கான புதிய தடுப்பூசிகளை உருவாக்க இன்னும் 3 முதல் 9 மாதங்கள் வரை ஆகலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட கொங்கோவில் பணியாற்றி, எபோலா தொற்றால் பாதிக்கப்பட்ட அமெரிக்க மருத்துவர் ஒருவர் தற்சமயம் ஜெர்மனிக்குச் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டுள்ளார். அதேபோன்று நோயாளியுடன் தொடர்பில் இருந்த மற்றொரு அமெரிக்க மருத்துவர் உகாண்டாவிலிருந்து செக் குடியரசுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்தத் தொற்றை எதிர்கொள்ளவும், 50 புதிய சிகிச்சை மையங்களைத் திறக்கவும் அமெரிக்க அரசு முதற்கட்டமாக 13 மில்லியன் டொலர் நிதியுதவியை அறிவித்துள்ளது.
அத்துடன், ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் தென்னாப்பிரிக்கா 2.5 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்க முன்வந்துள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.