டயகமவிலிருந்து தனிமனிதர் ஒருவர் நடை பவனியாக கொழும்பு காலிமுகத்திடலிற்கு பயணம் (Photos)
நுவரெலியா - டயகம, சந்திரிகாமம் தோட்டத்திலிருந்து காலிமுகத்திடலில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் நபரொருவர் நடை பவனியாக நடந்து செல்லும் பயணத்தினை ஆரம்பித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராகவும், விலைவாசி உயர்வு, எரிபொருள் தட்டுப்பாடு, தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள ஏமாற்றம் உள்ளிட்ட விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை குறித்த தோட்டத்தில் உள்ள 33 வயதுடைய புஷ்பநாதன் தியாகு என்ற இரண்டு பிள்ளையின் தந்தையே இவ்வாறு பயணத்தை முன்னெடுத்துள்ளார்.
இவரின் 178 கிலோமீற்றர் தூர நடை பயணம் வெற்றி பெற வேண்டும் எனத் தெரிவித்து தோட்டத்திலுள்ள 150 இற்கு மேற்பட்ட பொதுமக்கள் ஆலயத்திற்கு முன்பாக அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது பதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பி 'கோட்டா கோ ஹோம்' எனத் தெரிவித்து தேங்காய் உடைத்து எதிர்ப்பை வெளியிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்து குறித்த நபர் தேசியக் கொடியை ஏந்தி நடை பயணத்தை ஆரம்பித்தார்.
இவருக்கு ஆதரவு தெரிவித்த மக்கள் பலர் 03 கிலோமீற்றர் தூரம் கொண்ட டயகம நகரம் வரை பேரணியாக வருகை தந்தனர்.
கொழும்பு நோக்கி பயணம் செய்யும் குறித்த நபருக்கு ஆதரவாக நகரத்தில் உள்ள
வர்த்தகர்கள், பிரதேச மக்கள் அமோக வரவேற்பு வழங்கினார்கள். அதேவேளை இவருக்கு
மன்றாசி நகரத்திலும் வரவேற்பு வழங்கப்பட்டது.







