அம்பாறையில் மனித பாவனைக்கு உதவாத ஒரு தொகை உணவுப்பொருட்கள் அழிப்பு (Photos)
கல்முனை நீதிவான் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட கட்டளைக்கமைய அண்மையில் பறிமுதல் செய்யப்பட்ட மனித பாவனைக்கு உதவாத ஒரு தொகை கொத்தமல்லிகளை அழிக்கின்ற செயற்பாடு இன்று(17) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையினால் கல்முனை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது மனித பாவனைக்கு உதவாத கொத்தமல்லியை பதுக்கி வைத்திருந்த வர்த்தக களஞ்சியசாலைகள் சோதனை செய்யப்பட்டு கல்முனை நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இராசயன பகுப்பாய்வு அறிக்கை
இந்நிலையில் கைப்பற்றப்பட்ட கொத்த மல்லியை பரிசோதனைக்காக அரச இராசயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி அறிக்கை பெறுமாறும் கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் கட்டளையிட்டிருந்தார்.
இதற்கமைய அனுமதிக்கப்பட்ட விகிதத்தை விட அதிகளவாக கிடைக்கப்பெற்றதை அடுத்து கல்முனை நீதிவான் நீதிமன்ற கட்டளைக்கமைய சான்று பொருட்களாக நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டிருந்த 90 மூடைகளில் உள்ளடங்கியிருந்த சுமார் 2250 கிலோ கிராம் எடையுடைய கொத்தமல்லிகள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைப்பற்றப்பட்ட கொத்தமல்லிகள் யாவும் அனுமதிக்கப்பட்ட விகிதத்தை விட அதிகளவாக சல்பர் இரசாயனம் கலக்கப்பட்டிருந்ததாக அரச இராசயன பகுப்பாய்வு திணைக்களம் அறிக்கை வெளியிட்டதையடுத்து குறித்த அழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் போது நீதிமன்ற அதிகாரிகள் ,அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் புலன் விசாரணை உத்தியோகத்தர்கள் , பிராந்திய பொது சுகாதார பரிசோதகர்கள் ,உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பிரசன்னமாகியிருந்தனர்.







