வெளிநாட்டு மாணவர்களுக்கு ட்ரம்ப் நிர்வாகம் விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் அமெரிக்காவில் நிறுத்திவைக்கப்பட்ட வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா வழங்கும் நடைமுறைகள் கட்டுப்பாடுகளுடன் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்துடனான ட்ரம்பின் மோதலின் பின்னர் வெளிநாட்டு மாணவர்களுக்கு மாணவர் விசா வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்படுவதாக கடந்த மாதம் அமெரிக்கா தெரிவித்திருந்தது.
வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா வழங்கும் பணி
மாணவர் விசாவுக்கு விண்ணப்பித்தவர்களின் சமூக வலைத்தள கணக்குகளை ஆய்வு செய்து, அவர்களை பற்றிய பின்னணியை அறிய கால அவகாசம் தேவைப்படுவதால், இம்முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தது.
இதனால், அமெரிக்காவில் கல்வி என்ற கனவில் இருந்த வெளிநாட்டு மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா வழங்கும் பணியை அமெரிக்கா மீண்டும் தொடங்கி உள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
சமூக வலைத்தள கணக்குகள்
இதில் மாணவர்கள் தங்களது சமூக வலைத்தள கணக்குகளை அமெரிக்க அரசு ஆய்வுக்கு உட்படுத்த வழங்கிட வேண்டும் என்றும் அப்படி ஆய்வு செய்ய அனுமதி மறுப்பவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்களின் சமூக வலைத்தள கணக்குகளில், அமெரிக்காவுக்கு விரோதமாகவோ, அதன் அரசாங்கம், கலாசாரம், அமைப்புகள், அடிப்படை கொள்கை ஆகியவற்றுக்கு விரோதமாகவோ ஏதேனும் பதிவுகளோ, செய்திகளோ இருக்கிறதா என்று தூதரக அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள் எனறும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மொத்த மாணவர் எண்ணிக்கையில் 15வீதத்திற்கும் குறைவான வெளிநாட்டு மாணவர்களை சேர்க்கும் பல்கலைக்கழகங்களில் விண்ணப்பித்துள்ள மாணவர்களின் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கபடும் என வெளியுறவுத்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |