ஆர்ப்பாட்டம் செய்கின்ற உரிமை சகல பிரஜைகளுக்கும் இருக்கின்றது: எம்.ஏ.சுமந்திரன் (Photos)
அரசாங்கத்திற்கு அல்லது அரசாங்க திணைக்களங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்கின்ற உரிமை சகல பிரஜைகளுக்கும் இருக்கின்றதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
சின்னராசா லோகேஸ்வரன் தொடர்பான வழக்கு நேற்றுமுன் தினம் (29.09.2022) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது லோகேஸ்வரனுக்கு சார்பாக வாதிடும் போதே நீதிமன்றில் எம்.ஏ.சுமந்திரன் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் லோகேஸ்வரனை சிறைக்குள் தள்ளவேண்டும் என்ற தீய நோக்குடன் பொலிஸார் அடையாள அணிவகுப்பை உபயோகித்திருக்கின்றார்கள்.
குருந்தூர்மலை விவகாரம்
குருந்தூர்மலை விவகாரம் சம்பந்தமாக தொல்பொருள் திணைக்களத்தினுடைய செயற்பாடுகளுக்கு எதிராக கடந்த 21ஆம் திகதி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தினை மையமாகவைத்து முதலிலே ரவிகரன், மயூரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு பிணையிலே விடுவிக்கப்பட்டிருந்தார்கள்.
அதன் பின்னர் லோகேஸ்வரனைக் கைது செய்து, அவரைப் பிணையிலே செல்ல அனுமதிக்காத வகையிலே, சூழ்ச்சியாக ஒரு அடையாள அணிவகுப்புத் தேவை என்ற ஒரு போலியான காரணத்தினைச் சொல்லி அவரை ஒருவாரகாலம் விளக்கமறியலில் வைக்கச் செய்திருந்தார்கள்.
அந்த அடையாள அணிவகுப்பு வெறும் நாடகமாக நடைபெற்றதென நான் நீதிமன்றிலேயே சொல்லியிருக்கின்றேன். அதற்கான ஆட்சேபனையைத் தெரிவித்திருக்கிறோம்.
லோகேஸ்வரன், மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதி. மக்களுக்கு நன்றாகப் பரீட்சயமானவர். அவர் போராட்டத்தில் ஈடுபட்ட விடயம் பத்திரிக்கைகளிலே வெளிவந்திருக்கின்றது.
அப்படியானதொரு சூழலிலே அடையள அணிவகுப்பு வைப்பதென்பது முற்றிலும் தேவையற்றதொரு விடயம். ஆனாலும் அதனை உபயோகித்து அவரை ஒரு வாரகாலத்திற்காவது சிறைக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற தீய நோக்கத்துடன் பொலிஸார் செயற்பட்டிருக்கின்றார்கள் என்பதையும் நீதிமன்றிலே தெரியப்படுத்துகின்றேன்.
இது தனிநபர் உரிமை மாத்திரமல்ல. இது சகலருடைய உரிமை என்று உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் பல சொல்லியிருக்கின்றன.
அவற்றை மேற்கோள்காட்டி நீதிமன்றிலே சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கின்றது. பொலிஸார் வேண்டுமென்றே இந்தத் தொல்லியல் திணைக்களத்தினுடைய முறைப்பாட்டைவைத்து தீய எண்ணத்தோடு இதனைச் செய்திருக்கின்றார்கள்.
அடிப்படை மனித உரிமை
அடிப்படை மனித உரிமை வழக்குகள் தாக்கல் செய்யப்படும் என்பதனையும் சொல்லியிருக்கின்றேன்.
தொல்லியல் திணைக்களம் இந்தநாட்டிலே இருக்கிற மிக மோசமான இனவாதத் திணைக்களம். ஆகவே அவர்களுடைய செயற்பாடுகளுக்குக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என தெரிவித்துள்ளார்.
நேற்றுமுன் தினம் (29.09.2022) குறித்த வழக்கானது முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது நீதிமன்றம் லோகேஸ்வரனை விடுதலை செய்ததுடன், வழக்கானது அடுத்தவருடம் 02.02.2023ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளது.



