பழிவாங்கும் வகையில் செயற்பட்ட ஆசிரியர் - மாணவர்களுக்கான அனுமதி அட்டை வழங்க மறுப்பு
கிளிநொச்சி - கோனாவில் தமிழ் வித்தியாலயத்தில் கல்விப் பொதுத் தராதர (சா.த ) பரீட்சைக்கு தோற்றும் மூன்று மாணவர்களுக்கு பரீட்சைக்கான அனுமதி அட்டைகளை ஆசிரியர் ஒருவர் வழங்க மறுத்ததால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் வலயக்கல்வி பணிமணையில் முறையிட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் சாதாரண பரீட்சைகள் நடைபெற உள்ள நிலையில், அதற்கான அனுமதி அட்டைகள் பாடசாலைகளில் சுப நேரங்களில் வழங்கப்பட்டன.
குறிப்பாக நேற்றைய தினம் (24-05-2023) கிளிநொச்சி கோனாவில் தமிழ் வித்தியாலயத்தில் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
மாணவர்களை பழிவாங்கும் நோக்கம்
இதில் குறித்த பாடசாலையில் கல்வி கற்று வரும் மூன்று மாணவர்களுக்கான அனுமதியட்டைகளை ஆசிரியர் ஒருவர் மாணவர்களை பழிவாங்கும் விதத்தில் வழங்க மறுத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் பல தடவை கேட்ட போதும் அதனை குறித்த ஆசிரியர் வழங்க மறுத்துள்ளார்.
மேற்படி பாடசாலை அதிபரிடம் மாணவரகள் சென்று முறையிட்ட நிலையில் அதிபரின் உத்தரவையும் குறித்த ஆசிரியர் உதாசீனப்படுத்தியுள்ளார்.
வலயக் கல்வித் திணைக்களம்
இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் நேற்றைய பிற்பகல் கோணாவில் பாடசாலையில் இருந்து சுமார் 26 கிலோமீற்றர் தூரத்திலுள்ள கிளிநொச்சி தெற்கு வலயக் கல்வித் திணைக்களத்திற்கு சென்று முறைப்பாடுகளை தெரிவித்துள்ளனர்.
குறித்த மூன்று மாணவர்களும் வறுமைக்கோட்டின் கீழுள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் அவர்கள் வலயக்கல்வி திணைக்களத்தில் முறையிடுவதற்கு பெரும் சிரமங்களுக்கு மத்தியில் போக்குவரத்துச் செய்து குறித்த முறைப்பாட்டை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |