பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்: போதைப்பொருளுடன் சிக்கிய சந்தேக நபர்
திருகோணமலை-ஐந்தாம் கட்டைப் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் பிரதான சந்தேக நபரொருவரை திருகோணமலை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
திருகோணமலை பிராந்திய பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து நேற்றிரவு (12.07.2023) குறித்த சந்தேக நபர் கைது செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அம்மாந்தோட்டை- உதாகம்மான பகுதியில் வசித்து வரும் அந்தோணி பதுகே திலின பிரசாத் (34வயது) என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரிடம் விசாரணை
சம்பவம் குறித்து தெரிய வருவதாவது, குறித்த சந்தேக நபர் திருகோணமலை பிரதேசத்திற்கு ஹெரோயின் போதை பொருளை விற்பனைக்காக கொண்டு வருவதாக திருகோணமலை பிராந்திய பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த சந்தேக நபரை சோதனையிட்டபோது அவரிடமிருந்து 50 கிரேம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் விசாரணை செய்த போது கடந்த இரண்டு வருடங்களாக திருகோணமலை பிரதேசத்திற்கு அம்மாந்தோட்டை- பிரதேசத்திலிருந்து ஹெரோயின் போதை பொருளை கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும், புலன் விசாரணையின் பின்னர் திருகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |