நெல்லுக்கு அதிகூடிய விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்: செல்வம் எம்.பி கோரிக்கை
அரசாங்கம் வடக்கு கிழக்கில் உள்ள விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு இது வரை உரிய தீர்வை பெற்றுக் கொடுக்கவில்லை என்றும், பல்வேறு பாதிப்புகளுக்கு மத்தியில் விவசாய செய்கை யை முன்னெடுத்துள்ள விவசாயிகளின் நெல்லுக்கு உரிய நிர்ணய விலையை தீர்மானிக்க அரசாங்கம் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை(3) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாரிய அழிவு
“அரசாங்கம் தொடர்ந்தும் விவசாயிகள் மீது கருணை காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.
விவசாயிகள் தொடர்ச்சியாக ஏற்படுகின்ற இயற்கை அனர்த்தத்தினால் பாரிய அழிவுகளை சந்திக்கின்றனர்.
எனினும் தமது பாதிப்பிற்கு நியாயமான தீர்வை தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் அதே நேரம் அரசாங்கம் விவசாயிகளின் நெல்லின் விலையை நிர்ணயம் செய்யும் நிலையில் அவரது சிந்தனை இருக்கவில்லை என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.
பொறுப்பான அமைச்சர், நெல்லின் நிர்ணய விலையை அறிவிப்பதாக கூறுகின்ற அதே நேரம் அனுராதபுரம் மற்றும் ஏனைய பகுதிகளில் நெல் அறுவடை முடிந்த பின்னரே நெல்லுக்கு நிர்ணய விலையை தாம் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
நிர்ணய விலை
அனுராதபுரத்தில் உள்ள விவசாயிகள் மாத்திரமே விவசாயிகளா? வடக்கு - கிழக்கில் உள்ள விவசாயிகளை விவசாயிகள் போல் தெரியவில்லையா?
நெல்லுக்கான நிர்ணய விலையை அரசாங்கம் குறைவாக நிர்ணயிக்க உள்ளதாக அறிகிறோம்.
இதனால் விவசாயிகள் விவசாயத்திற்காக செலவு செய்த முதலீடுகளை மீள பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்படும்” என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |