போதைப்பொருள்களுடன் ஒரே நாளில் 998 பேர் கைது!
நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ், நேற்று(24) ஒரே நாளில் மாத்திரம் 998 சந்தேகநபர்கள் போதைப்பொருள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் விநியோகஸ்தர்களைக் குறிவைத்து நேற்று நாடு முழுவதும் 996 விசேட சோதனை நடவடிக்கைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்த விசேட சோதனைகளின் போது போதைப்பொருள் கைவசம் வைத்திருந்த மற்றும் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 998 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
கைது செய்யப்பட்டவர்களில் போதைப்பொருள் வலையமைப்புடன் நெருங்கிய தொடர்புடைய 8 பேருக்கு எதிராக நீதிமன்றில் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டு மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
போதைப்பொருள் பாவனைக்குக் கடுமையான முறையில் அடிமையாகியுள்ள நால்வர் அடையாளம் காணப்பட்டு, அவர்களைப் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப் பொலிஸாரால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

நேற்று முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனைகளின் போது சந்தேகநபர்களிடமிருந்து பொலிஸாரால் பெருமளவு போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதன்படி, சந்தேகநபர்களிடமிருந்து 422 கிராம் ஹெரோயின், 3 கிலோகிராம் 53 கிராம் ஐஸ், 2 கிலோகிராம் 219 கிராம் கஞ்சா, 7 கஞ்சா செடிகள், 25 கிராம் குஷ் ரக போதைப்பொருள், ஒரு கிலோகிராம் 225 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 1,027 போதை மாத்திரைகள், 252 கிராம் மதனமோதகம் மற்றும் 147 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.