கனடாவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு! பலியானோரின் உருக்கமான பின்னணி
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள டம்பிளர் ரிட்ஜ் (Tumbler Ridge) நகரில், ஒரு பாடசாலையிலும் வீடொன்றிலும் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
18 வயது இளைஞரான ஜெசி வான் ரூட்செலார் (Jesse Van Rootselaar) என்பவரால் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், அவரது தாயார் ஜெனிபர் ஜேக்கப்ஸ் மற்றும் 11 வயது தம்பி எம்மெட் ஜேக்கப்ஸ் ஆகியோரும் உயிரிழந்துள்ளனர்.
தற்கொலை
துப்பாக்கிச் சூடு நடத்திய ஜெசி, பின்னர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக பொலிஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

வெறும் 3,000 மக்கள் மட்டுமே வசிக்கும் இந்தச் சிறிய கிராமப்புற சமூகத்தில், காயமடைந்த 27 பேரையும் சேர்த்துப் பார்க்கும்போது, அங்குள்ள ஒவ்வொருவருக்கும் பாதிக்கப்பட்ட யாராவது ஒருவரைத் தெரிந்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் பாடசாலை மாணவர்கள் மூவர் பலியாகியுள்ளனர். 12 வயதான கைலி ஸ்மித் எனும் மாணவி, எதிர்காலத்தில் ஒரு சிறந்த ஓவியராக வேண்டும் என்ற கனவுடன் இருந்தவர்.
அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள சம்பவம்
அதேபோல், அறிவியலில் ஆர்வம் கொண்ட மற்றும் சிறந்த கால்பந்து வீரராகத் திகழ்ந்த ஏபெல் மவன்சா (12) மற்றும் புத்திசாலிப் பெண்ணாக வர்ணிக்கப்படும் ஜோயி பெனாய்ட் (12) ஆகியோரும் பலியாகியுள்ளனர்.
"எனது மகனை மீண்டும் உயிர்ப்பிக்கும் சக்தி எனக்கு இருந்திருந்தால், அவனுடன் பலியான அனைவரையும் மீட்டிருப்பேன்; இவ்வளவு சிறிய வயதில் பிள்ளை கொல்லப்படுவதைப் பார்ப்பது இதயத்தை உடைக்கிறது," என்று ஏபெல்லின் தந்தை சமூக வலைதளத்தில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
இந்த துயரச்சம்பவம் கனடா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.