வவுணதீவில் இருவேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 6 பேர் கைது
மட்டக்களப்பு - வவுணதீவு பிரதேசத்தில் மாட்டுப்பட்டியில் மாடுகளைத் திருடி ஜீப் ரக வாகனத்தில் காத்தான்குடி பிரதேசத்திற்குக் கடத்திச் சென்ற மற்றும் சட்டவிரோதமாக ஆற்று மண்ணை உழவு இயந்திரத்தில் எடுத்துச்சென்ற 3 பேர் உட்பட இரு வெவ்வேறு சம்பவங்களில் 6 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று வியாழக்கிழமை (06) அதிகாலை குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலும் தெரிவிக்கையில்,
பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவுக்குக் கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான இன்று அதிகாலை 1-30 மணியளவில் வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிசந்த அப்புகாமி தலைமையில் சப் இன்பெக்டர் குணவர்த்தன, சி.லோஜிதன், வை.தினேஸ், ஜெயசுந்தர, சதுரங்க, சதுரங்க ஆகியோர் வலையிறவுபால பொலிஸ் வீதிச் சோதனைச்சாவடியை அண்மித்த பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இதன்போது அங்கு ஜீப் ரகவாகனம் ஒன்று வலையிறவு பாலத்தை நோக்கி பிரயாணித்தபோது அதனை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் வவுணதீவு பிரதேசத்திலிலுள் மாட்டுப்பட்டியில் உள்ள 6 மாடுகளைத் திருடி அதனை காத்தான்குடிக பிரதேசத்துக்கு எடுத்துச் செல்வதைக் கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து காத்தான்குடியைச் சேர்ந்த 3 பேரைக் கைது செய்ததுடன், 6 மாடுகள், ஜீப் ரக வாகனம் ஒன்றையும் மீட்டுள்ளனர்.
அதேவேளை இலுப்படிச்சேனை கைலியாமடு ஆற்றில் சட்டவிரோதமாக ஆற்று மணலை அகழ்ந்து இரு உழவு இயந்திரத்தில் எடுத்துச்சென்ற 3 பேரைக் கைது செய்ததுடன், இரு உழவு இயந்திரங்களை ஆற்று மண்ணுடன் மீட்டுள்ளனர்.
இவ்வாறு இரு வெவ்வேறு சம்பவங்களில் கைது செய்யப்பட்ட 6 பேரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை வவுணதீவு பிரதேசத்தில் உள்ள மாட்டுப்பட்டியிலிருந்து அண்மைக்காலமாக
20 மாடுகள் திருட்டுப்போயுள்ளதாகவும், மாடுகளுக்கு நோய் தாக்கம்
ஏற்பட்டுள்ளதால் 3 மாத காலத்திற்கு மாடுகளை விற்பதற்கும், இறைச்சிக்கு
வெட்டுவதற்கும் வவுணதீவு கால்நடைகள் சுகாதார வைத்தியர் தடைவிதித்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.


