அமைச்சரவையின் ஒப்புதலுக்கு வரும் 21வது திருத்தம்!
21 தடம்புரள்கிறது
கோட்டாபய ராஜபக்ச - ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள கடுமையான பிளவுகள், அரசியலமைப்பின் 21வது திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதை தடம் புரளும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கருத்தை வாராந்த செய்தித்தாள் ஒன்று குறிப்பிட்டுள்ளது. 21 தொடர்பில் ஆளும் கட்சிக்குள் அதிருப்தி அதிகரித்து வருகிறது.
அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் எதிர்கொள்ளும் மோசமான இன்னல்களைப் போக்குவதே, தற்போதைக்கு முக்கியமான தேவை என்று கணிசமானோர் வாதிடுகின்றனர்.
21வது திருத்தம் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு வரும்போது, குறிப்பாக ஒரு மாதத்திற்குப் பிறகு, நிலைமை இன்னும் குழப்பமான நிலைக்குச் சென்றுவிடும் என்று அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
அத்தியாவசிய நெருக்கடியால் என்ன நடந்தாலும் ஜனாதிபதி நந்தசேன கோட்டாபய ராஜபக்ச பகிரங்கமாக அறிவித்தபடி, தனது பெரும்பாலான அதிகாரங்களுடன் பதவியில் நீடிப்பார் என்று கருதப்படுகிறது.
கடந்த அமைச்சரவை
கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் 21வது திருத்த வரைவு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படாததால், அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சியினர் ஆச்சரியமடைந்துள்ளனர்.
இந்தநிலையில் இன்று நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் 21க்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, நாளை 21 ஆம் திகதியன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உயர்நீதிமன்ற வியாக்கியானம்
இதன் பின்னர் அந்த நகல் அரசியலமைப்புடன் ஒத்துப்போகிறதா? என்பதற்கான வியாக்கியானத்துக்காக, சபாநாயகரால் உயர்நீதிமன்றுக்கு அனுப்பப்படவுள்ளது.
இதன்போது இந்த வரைவை சவாலுக்கு உட்படுத்த உயர்நீதிமன்றம் இரண்டு வார கால அவகாசத்தை வழங்கும்.
இதனையடுத்து உயர்நீதிமன்றின் வியாக்கியானத்துடன் திருத்தங்கள், நாடாளுமன்றில் இரண்டாம் வாசிப்புக்காக எடுக்கப்படுவதற்கு ஒரு மாதம் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுஜன பெரமுனவின் ஆதரவு
இதற்கிடையில் நாடாளுமன்றில் இந்த 21வது திருத்தத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை, கிடைக்குமா? என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பொதுஜன பெரமுனவும் நிறைவேற்று ஜனாதிபதி முறை முற்றாக ஒழிக்கப்படவேண்டும் என்றும் அரசியல் அமைப்பு திருத்தங்கள், துண்டு துண்டாக நிறைவேற்றப்படக்கூடாது என்ற கருத்தை கொண்டிருப்பதே இதற்கான காரணமாகும்.
எனவே அதிக உறுப்பினர்களை கொண்டுள்ள பொதுஜன பெரமுனவின் ஆதரவு கிடைத்தால் மாத்திரமே, 21ஐ நடைமுறைப்படுத்தமுடியும் என்பது யதார்த்தமாகும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விசேட சந்திப்பு
இதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும், ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்றைய தினம் விசேட சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி மாளிகையில் இன்று மாலை 5.00 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
எரிபொருள் பிரச்சினை, அதற்கான தீர்வுகள் மற்றும் நாடாளுமன்ற அமர்வுகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இன்றைய சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளது.
ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கூட்டம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக தகவல்-கமல்