மன்னாரில் மேலும் புதிதாக 20 தொற்றாளர்கள் அடையாளம் -அதிகமானவர்கள் மீனவர்கள்
மன்னார் மாவட்டத்தில் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனைகளின் போது 20 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று வெள்ளிக்கிழமை (11) காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்டத்தில் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனை முடிவுகள் நேற்று வியாழன் மற்றும் இன்று வெள்ளி ஆகிய இரு தினங்கள் கிடைக்கப் பெற்றுள்ளது.
இதன் போது 20 கோவிட் தொற்றாளர்கள் மன்னார் மாவட்டத்தில் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்குச் சென்ற போதும்,ஏனைய 19 நபர்களும் கடந்த வெள்ளிக்கிழமை பனங்கட்டிக்கொட்டு மற்றும் எமில் நகர் போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட 412 பி.சி.ஆர்.பரிசோதனையின் அடிப்படையில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் சேர்த்து சமூகத்தில் நாள் ஒன்றிற்கு 4 நபர்கள் வீதம் இம்மாதம் 46 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இம்மாதம் 1784 பி.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, மொத்தமாக 18 ஆயிரத்து 808 பி.சி.ஆர். பரிசோதனைகள் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொது மக்கள் தொடர்ந்தும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றித் தொற்று நோயிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.மாவட்டத்திற்கான சமூக தடுப்பூசி வழங்கல் நடவடிக்கை வெகு விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளது. தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவுடன் இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.
கடந்த வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அதிகமாக கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்குத் தொற்று உள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஆகையால் மீன் வாடிகளிலும் நெருக்கமாக இருந்து தொழில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமையினால், சுகாதார நடை முறைகளை உரிய முறையில் கடைப்பிடித்து தொழில் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.