இலங்கையை உலுக்கிய டித்வா புயல்: மண்ணில் புதையுண்ட பலர்! அதிகாரிகள் வெளியிட்ட தகவல்
இலங்கையைத் தாக்கிய 'டிட்வா' சூறாவளியின் பின்னரான பாதிப்புகள் குறித்த ஆய்வறிக்கை, இடம்பெயர்ந்த மக்களின் அவல நிலையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
சர்வதேச இடம்பெயர்வுக்கான அமைப்பு (IOM) மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (IFRC) இணைந்து நடத்திய ஆய்வின்படி, 1,332 குடும்பங்களைச் சேர்ந்த 4,729 நபர்கள் இன்னும் தற்காலிக பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ளனர்.
மேலும் 6 மாவட்டங்களில் (பதுளை, கேகாலை, நுவரெலியா, கொழும்பு, மாத்தளை மற்றும் கண்டி) 45 பாதுகாப்பு மையங்கள் தொடர்ந்தும் இயங்கி வருகின்றன. அத்துடன் பாடசாலைகள், கோவில்கள் மற்றும் பொது மண்டபங்கள் அதிகளவில் தங்குமிடங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.
முகாம்களில் தங்கியிருப்பவர்களில் பெண்களும் குழந்தைகளும் அதிக விகிதத்தில் உள்ளனர்: இதில் பெண்கள் 27 சதவீதமும் ஆண்கள் 25 சதவீதமும், சிறுவர்கள் 26 சதவீதமும் மற்றும் முதியவர்கள் 14 சதவீதமும் உள்ளனர்.

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் 64% முகாம்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் மாற்றுத்திறனாளிகள் 1% பேர் இருந்தபோதிலும், 60% முகாம்கள் அவர்களுக்கு ஏற்ற வசதிகளைக் கொண்டிருக்கவில்லை.
அறிக்கையின்படி, சுகாதார மற்றும் பாதுகாப்பு ரீதியாகப் பாரிய சவால்கள் நிலவுகின்றன: ஒரு கழிவறையை சராசரியாக 23 பேர் பயன்படுத்துகின்றனர் (சர்வதேச தரநிலை 20 பேருக்கு ஒன்று).
35% மையங்களில் வன்முறை அல்லது துன்புறுத்தல்களைத் தடுப்பதற்கான பாதுகாப்பு ரோந்து அல்லது முறையான விதிகள் இல்லை. 27% இடங்களில் மட்டுமே பாலூட்டும் தாய்மார்களுக்கான பிரத்யேக இடவசதி உள்ளது. 40% இடங்களில் மட்டுமே முதலுதவிப் பெட்டிகள் உள்ளன. 25% இடங்களில் மருந்துகளைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல் நிலவுகிறது. பெரும்பாலான முகாம்கள் அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படுகின்றன. பதுளை மற்றும் கேகாலை மாவட்டங்களில் உள்ள முகாம்கள் இன்னும் 3 மாதங்களுக்கு மேல் இயங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனைய மாவட்டங்களில் மீள்குடியேற்றத் திட்டங்கள் மூலம் 1-3 மாதங்களுக்குள் முகாம்களை மூடத் திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய இணைப்பு செய்தி - அமல்
முதலாம் இணைப்பு
நாட்டை தாக்கிய டித்வா சூறாவளியினால் காணாமல்போன 173 பேரை, இதுவரையிலும் கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் திகதி, இலங்கையின் தென் கடற்பரப்பில் உருவான குறைந்த அழுத்தம் நவம்பர் 27 ஆம் திகதி சூறாவளியாக மாறியது.
22 மாவட்டங்கள் கடுமையாக பாதிப்பு
இந்த சூறாவளியினால் நாட்டின் 22 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், சுமார் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இலங்கை வரலாற்றில் இயற்கை அனர்தத்தினால் ஏற்பட்ட அதிகூடிய உயிரிழப்பாக பதிவாகியிருந்ததுடன், அதிகமான மரணங்கள் மத்திய பகுதியிலுள்ள பதுளை மாவட்டத்தில் பதிவாகியிருந்தது.

டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட 1150 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் பலர் வேறு இடங்களில் தங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
டித்வா ஏற்படுத்திய பரவலான பேரழிவுக்கு பின்னர் 93 நாட்களுக்கு மேலாக, மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், காணாமல்போன 173 பேரை, இதுவரையிலும் கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.