யாழில் திடீரென மயங்கிய இளைஞன் உயிரிழப்பு: பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்
யாழில் திடீரென உடல் சுகயீனம் ஏற்பட்ட இளைஞர் ஒருவர் இன்றையதினம்(21) உயிரிழந்துள்ளார்.
தேவாலய வீதி, சங்கானை பகுதியைச் சேர்ந்த பரமானந்தம் கோவிந் (வயது 26) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
திடீரென நெஞ்சுவலி
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இவர் நேற்றிரவு(20) உணவருந்திவிட்டு தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தார்.
இதன்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் வீட்டிலேயே மயக்கமடைந்துள்ளார். இந்நிலையில் அவரை சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் உயிரிழந்துள்ளார்.
பரிசோதனை
உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
சாட்சிகளை மானிப்பாய் பொலிஸார் நெறிப்படுத்தினர்.
இதய உறை அறைக்குள் இரத்தக்கசிவு ஏற்பட்டு மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
