புத்திமதி கூறிய பௌத்த பிக்குவை அடித்து கொலை செய்த இளைஞர்கள்
ஆற்றில் இருக்கும் மீன்களை பிடிப்பது பாவ செயல் என அறிவுறுத்தியுள்ளதால், ஆத்திரமடைந்த இளைஞர்கள் சிலர் பௌத்த பிக்குவை பொல்லுகளால் தாக்கி கொலை செய்துள்ளதாக வெலிகமை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 29 ஆம் திகதி தாக்குதலுக்கு உள்ளான பௌத்த பிக்கு 16 நாட்கள் மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்துள்ளார்.
வெலிகமை கொவியாபான கப்புவத்தை ஸ்ரீ விவேகாராம விகாரையின் விகாராதிபதியான 80 வயதான தித்தகல்லே தேவானந்த தேரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் 5 இளைஞர்களை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
தேவானந்த தேரர், விகாரைக்கு பின்னால் ஓடும் ஆற்றில் வாழும் மீன்களுக்கு தினமும் சோறு போடுவதை நீண்டகாலமாக செய்து வந்துள்ளார்.
கடந்த 29 ஆம் திகதி ஆற்றுக்கு அருகில் இருந்த இளைஞர் மீன்பிடிக்க ஆரம்பித்துள்ளார். அதனை பார்த்த தேரர், அது பாவ செயல் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த இளைஞர் மேலும் 5 பேருடன் சென்று தேரரை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.