வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி இளைஞரொருவர் உயிரிழந்த சம்பவம்! ஐவர் கைது
அம்பாறை - சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரமுனை பகுதியில் 10 பேர் அடங்கிய குழுவினர் மேற்கொண்ட வாள் வெட்டுத்தாக்குதலில் படுகாயடைந்து இளைஞரொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விடயத்தை சம்மாந்துறை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வுபிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா தெரிவித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
கடந்த 26ஆம் திகதி வீரமுனையில் முன் விரோதம் காரணமாக 10 பேர் கொண்ட குழுவினர் மேற்கொண்ட தாக்குதலில் 30 வயதுடைய இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தப்பி சென்றிருந்த நிலையில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா தலைமையில் விசேட குழு மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் இவர்களை நாளை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தலைமறைவாகியுள்ள ஏனைய சந்தேகநபர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார்.