இளைஞர் மீது இராணுவம் - விசேட அதிரடிப்படையினர் தாக்குதல்! மானிப்பாயில் நடந்தது என்ன..!
யாழ்ப்பாணம் - மானிப்பாய் ஆலடி சந்தியில் இரவு வேளையில் இளைஞர் மீது இராணுவம், விசேட அதிரடிப்படையினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
யாழ்.மானிப்பாய் ஆலடிச்சந்திக்கு அண்மையில் நேற்றிரவு 8:30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றிருந்தது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த 28 வயதுடைய பாலமுரளி நிறோசன் என்ற இளைஞர் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மானிப்பாய் சந்திப்பகுதியில் பொலிஸார் நேற்றிரவு வீதி சோதனை நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளனர். இரவு 8.30 மணியளவில் வீதியால் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் ஒருவர் தலைக்கவசம் அணியாத நிலையில் பொலிஸார் மறித்து இளைஞர் நிற்காமல் சென்றுள்ளார்.
இராணுவம் - விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல்
இதனை தொடர்ந்து மானிப்பாய் அந்தோனியார் கோவில் அருகிலுள்ள ஒழுங்கையில் வைத்து இளைஞரைப் பொலிஸார் மடக்கி பிடித்துள்ளனர்.
இதன்போது இளைஞர் தான் செய்த தவறு என்று பொலிஸாரிடம் கூறியுள்ளார். அங்கு வந்த இளைஞரின் நண்பன், தலைகவசம் அணியாமல் சென்ற தவறுக்குரிய தண்டத்தை விதிக்குமாறு கோரியுள்ளார். அதற்கு அங்கு நின்ற பொலிஸார் இணங்கவில்லை. அங்கு வீதிப் போக்குவரத்துப் பொலிஸார் இல்லை என்பதைக் காரணம் கூறி ரோந்து கடமையிலிருந்த பொலிஸார் தண்டப்பற்றுச் சீட்டை வழங்கவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
இதன்போது அங்கு வந்த இராணுவத்தினர் இளைஞரின் நண்பனான பாலமுரளி நிரோசனின் நெஞ்சில் பிடித்துத்தள்ளியுள்ளனர். அவரும் இராணுவத்தினரைத் தள்ளியுள்ளார். அந்த நேரத்தில் வீதியால் சென்ற 3 விசேட அதிரடிப்படையினரும் அங்கு வந்து நிறோஷன் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதன்போது தன்னை விடுவிக்குமாறு நிரோஷன் அபயக்குரல் எழுப்பியபோதும் வீதியில் வைத்து இராணுவத்தினரும், விசேட அதிரடிப்படையினரும் மூர்க்கமாக அவரைத் தாக்கிவிட்டு மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த இளைஞரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லாது காயங்களுடன் மானிப்பாய் பொலிஸ் நிலையத்திலேயே தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, யாழ்ப்பாணம், மானிப்பாயில் பொலிஸார் , இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் விசேட
அதிரடி படையினர் இணைந்து இளைஞன் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை
ஆரம்பித்துள்ளதாக மனிதவுரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ்
தெரிவித்துள்ளார்.