முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு
ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் முதலையால் இழுத்து செல்லப்பட்டு, சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவமானது கடந்த ஞாயிற்றுக்கிழமை(03) இடம்பெற்றுள்ளது.
அம்பாறை மாவட்டம் - ஒலுவில் ஆத்தியடிக்கட்டு ஆற்றில் மீன்பிடித்துக்கொண்டிருக்கும் போது முதலையால் தாக்கப்பட்டு,இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
சடலம் மீட்பு
இந்த நிலையில், தேடுதல் பணி கடந்த இரண்டு தினங்களாக தேடுதல் பணி முன்னேடுக்கப்பட்ட நிலையில், குடும்பஸ்தர் நேற்று(05.01.2026) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீரின் அளவு அதிகரிப்பு மற்றும் இருள் சூழந்த நிலையிலும் நேற்று இரவு 10 மணி வரை தொடர் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இரண்டாவது நாளாக இன்று தீவிர தேடுதல் முன்னெடுக்கப்பட்டிருந்த வேளையில், காணாமல் போன இளம் குடும்பஸ்தர் முதலை கடித்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், ஒலுவில்-1 அஸ்ரப் நகர்-12 பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 38வயதுடைய அப்துல் குத்தூஸ் றமீஸ் என்பவர் என்றும் தெரியவந்துள்ளது.
தேடுதல் பணி
குறித்த ஆற்றில் மூவர் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் இரண்டு நாட்களாக ஒலுவில் பகுதியில் உள்ள பொதுமக்கள், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய பிரதிப் பணிப்பாளர், சாய்ந்தமருது ஜனாசா நலன்புரி மக்கள் பேரவை, பொலிஸ் உத்தியோகத்தர்கள், கடற்படை பிரிவினர் மற்றும் அல் - உஸ்வா சம்மாந்துறை ஜனாசா அமைப்புக்களின் உதவியுடன் மேற்படி நபரின் சடலம் மீட்பு பணி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மீட்கப்பட்ட சடலத்தின் மீதான மரண விசாரணை அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுகோளுக்கமைய திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எச்.அல்-ஜவாஹிர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டு, முதலை தாக்கியதால் தான் மரணம் சம்பவித்துள்ளதாக குறிப்பிட்டு சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.


