ஈரான் சுத்திகரிப்பு நிலையத்திற்கு வரலாற்றில் முதன் முறையாக அமெரிக்கன் கச்சா எண்ணெய்
மர்பன் கச்சா எண்ணெய் கப்பல்களைப் பெற்றுக்கொள்ள முடியாமையினால் சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்திற்கு WTI வகை கச்சா எண்ணெயை ஆர்டர் செய்துள்ளதாக இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.
ஈரான் நாட்டு இலகுரக கச்சா எண்ணெயைச் சுத்திகரிப்பதற்காக 1969 ஆம் ஆண்டு ஈரான் நிறுவனத்தால் இந்த சுத்திகரிப்பு நிலையம் நிர்மாணிக்கப்பட்டது.
அதன்பின்னர் 57 ஆண்டுகளில் முதல் முறையாக சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்திற்காக இலங்கை WTI கச்சா எண்ணெயை கொள்வனவு செய்கிறது.
சுத்திகரிப்பு நிலையத்தின் தன்மை
இந்த சுத்திகரிப்பு நிலையம் ஒரு நாளைக்கு 50,000 பீப்பாய்கள் எண்ணெயைச் சுத்திகரிக்கும் திறன் கொண்டது. 2011 ஆம் ஆண்டு ஈரான் மீது அமெரிக்கா தடைகளை விதித்த பின்னர் ஈரான் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய முடியாமல் போனதால் இலங்கை மத்திய கிழக்கின் இலகுரக கச்சா எண்ணெயான மர்பன் (Murban) வகைக்கு மாறியிருந்தது.
இவ்வாறானதொரு நெருக்கடியை எதிர்கொள்வதற்காக எமது சுத்திகரிப்பு நிலையத்தின் கச்சா எண்ணெய் வகையை மாற்றினோம்.
நாம் அமெரிக்க கச்சா எண்ணெய் வகையான WTI -க்கு மாறுகிறோம் என கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா சனிக்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
நாங்கள் (WTI) மாதிரியொன்றைக் கொண்டு வந்து அனைத்து சோதனைகளையும் செய்தோம். அதனைப் பெற்றுக்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்.
இதற்காக இரண்டு டெண்டர்களையும் கோரியுள்ளோம். சரக்குக் கட்டணங்கள் அதிகமாக இருந்ததால் கொண்டு வர முடியவில்லை என்றார்.

போர் சூழல் சுத்திகரிப்பு நிலையத்தை மூடுவதற்கு அல்லது அதன் தினசரி 50,000 பீப்பாய்கள் உற்பத்தித் திறனைப் பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறான தொழில்நுட்ப ரீதியான பொருத்தமின்மை காரணமாக இலங்கை கச்சா எண்ணெய்க்குப் பதிலாக அதிக விலையுயர்ந்த சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களை இறக்குமதி செய்வதில் தங்கியிருக்க வேண்டியுள்ளது.
இது நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பை மேலும் குறைக்க வழிவகுத்துள்ளது.