உரத் தட்டுப்பாட்டில் தவிக்கும் உலக நாடுகள்: நிலக்கரி மூலம் சாதிக்கும் சீனா!
ஈரான் போர் காரணமாக உலகளவில் உர விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல நாட்டு விவசாயிகள் குறைந்த உரத் தேவையுள்ள பயிர்களுக்கு மாறி வருகின்றனர்.
ஆனால், சீனா தனது தனித்துவமான நிலக்கரி பயன்பாட்டின் மூலம் யூரியா உற்பத்தியில் தன்னிறைவு பெற்று, தட்டுப்பாடின்றி இயங்கி வருகிறது.
உலகளவில் யூரியா உற்பத்திக்கு ரஷ்யா மற்றும் சவூதி அரேபியா போன்ற நாடுகள் இயற்கை எரிவாயுவை (Gas) நம்பியிருக்க, சீனா தனது யூரியா உற்பத்தியில் 78 சதவீதத்தை உள்நாட்டிலேயே தாராளமாகக் கிடைக்கும் நிலக்கரியைப் பயன்படுத்தித் தயாரிக்கிறது.
எரிவாயு விலை
இது எரிவாயு விலை ஏற்ற இறக்கங்களிலிருந்து சீனாவைப் பாதுகாப்பதோடு, போர்க்காலங்களில் எரிசக்தி இறக்குமதியைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியத்தையும் குறைத்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணை வழியாக உரப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், சர்வதேச சந்தையில் யூரியா விலை பெப்ரவரி மாத இறுதியில் இருந்து 70 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

இந்தோனேசியாவில் ஒரு டன் யூரியா சுமார் 700 முதல் 780 டொலர்கள் வரை விற்கப்படும் நிலையில், சீனாவில் அதன் விலை வெறும் 255 முதல் 267 டொலர்கள் (சுமார் 1,800 யுவான்) என்ற அளவிலேயே உள்ளது.
இதன் காரணமாக, அமெரிக்க விவசாயிகள் அதிக உரத் தேவை கொண்ட சோளத்திற்குப் பதிலாக சோயாபீன்ஸ் பயிரிட முடிவு செய்துள்ளனர்.
சீனா தடை
அதேபோல் அவுஸ்திரேலிய விவசாயிகளும் கோதுமைக்குப் பதிலாக பார்லி பயிரிடத் தொடங்கியுள்ளனர். ஆனால், சீனாவில் உர விலை குறைவாக இருப்பதால், அங்குள்ள விவசாயிகள் இலாபம் தரும் சோளம் போன்ற பயிர்களையே தொடர்ந்து பயிரிட்டு வருகின்றனர்.
இருப்பினும், உள்நாட்டு விலையைக் கட்டுக்குள் வைப்பதற்காக யூரியா ஏற்றுமதிக்கு சீனா தடை விதிக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

வழக்கமாக மே மாதத்தில் அறுவடைக்குப் பிந்தைய உபரி இருப்பைக் கணக்கிட்ட பின்னரே சீனா ஏற்றுமதி குறித்த முடிவை எடுக்கும்.
இந்த ஆண்டு சீனாவின் யூரியா உற்பத்தி சாதனை அளவாக 7.65 கோடி தொன்னாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது, இது கடந்த ஆண்டை விட 6.3 சதவீதம் அதிகம்.
உலகளவில் உரத் தட்டுப்பாடு நிலவினாலும், நிலக்கரியை அடிப்படையாகக் கொண்ட உத்திகளால் சீனா தனது விவசாயத் துறையைத் தற்காத்துக் கொண்டுள்ளது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.