வெள்ளவத்தையில் தொடருந்து மோதி பெண் ஒருவர் பரிதாப மரணம்
கொழும்பு, வெள்ளவத்தை தொடருந்து நிலையத்துக்கு அருகாமையில் தொடருந்து மோதியதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற இந்தத் துரதிர்ஷ்டவசமான விபத்துத் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பாணந்துறையிலிருந்து கொழும்பு - மருதானை நோக்கிப் பயணித்த தொடருந்திலேயே இப்பெண் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் அடையாளம் மற்றும் முகவரி இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனத் தெரிவிக்கும் பொலிஸார், அவரை அடையாளம் காண்பதற்கான விவரங்களை வெளியிட்டுள்ளனர்.
அடையாளம் காண உதவி..
ஆடை: வெள்ளை மற்றும் கபில நிறக் கலப்பிலான சேலை அணிந்துள்ளார்.
உடைமை: விபத்து நடந்த இடத்தில் அவரிடமிருந்து பச்சை நிறக் கைப்பை ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

விபத்து நடந்த உடனே விரைந்து செயற்பட்ட வெள்ளவத்தை பொலிஸார், பெண்ணின் சடலத்தை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காகக் களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைத்துள்ளனர்.
இந்த விபத்துத் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், உயிரிழந்த பெண் குறித்த ஏதேனும் விவரங்கள் தெரிந்தாலோ அல்லது உரிமையாளர்கள் எவரேனும் இருந்தாலோ உடனடியாக வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்துடனோ அல்லது களுபோவில வைத்தியசாலையுடனோ தொடர்புகொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.