வறுமைக்கு மத்தியிலும் இந்தியா சென்று சாதனை படைத்த வடக்கு குத்துச்சண்டை வீரர்கள்
இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் உள்ளிட்ட வெற்றிக் கிண்ணங்களை பெற்ற குத்துச்சண்டை குழுவினர் நேற்று பலாவி சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர்.
வடக்கு மாகாணத்தில் இருந்து பிரபாகரன் ரதுக்ஸன், நகுலேஸ்வரன் சிறீஹரிஸ், லெனின் சானுராஜ், முஹமட் றிலாஸ், புஸ்பநாதன் அஜந்தா ஆகிய வீர வீராங்கனைகள் இந்தியாவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிக்கிழமை பங்குபற்றினர்.
முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
குத்துச்சண்டையில் எட்டு வகைகள் காணப்படுகின்ற நிலையில், இதுவரை வடக்கு - கிழக்கில் இருந்து எவரும் பங்கெடுக்காத வகையிலான குத்துச்சண்டை போட்டியிலேயே அவர்கள் பங்கெடுத்து சாதனையை நிலைநாட்டி நாடு திரும்பினர்.

அவர்களது பயிற்றுவிப்பாளரான தியாகராஜா நாகராஜா என்பவரும் அவர்களோடு உடனிருந்து போட்டியின்போது ஊக்கமளித்துள்ளார்.
குறித்த போட்டியில் பங்குபற்றுவதற்கு செல்வதற்கு எவரும் நிதி உதவி வழங்காத நிலையில் கடன்பட்டும், வீட்டில் உள்ள பொருட்களை விற்பனை செய்துமே சில போட்டியாளர்கள் இதில் கலந்துகொண்டதாக அந்த வெற்றியாளர்கள் கூறுகின்றனர்.
எனவே இந்த கலையினை வளர்ப்பதற்கும், சர்வதேச போட்டிகளில் கலந்துகொள்வதற்குமான ஏற்பாடுகளை அரசாங்கம் உட்பட ஏனைய தரப்பினர் இணைந்து செய்யவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

